Showing posts with label life. Show all posts
Showing posts with label life. Show all posts

Tuesday, 16 February 2010

வாழ்வியலில் காதல்!!!!

நம் சுந்தரம் பிள்ளை ஒரு அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். எந்நேரமும் புலம்பலிலேயே இருப்பது அவரது வாடிக்கை. சிலர் மதுவில் போதை காண்பர். நம் சுந்தரம் பிள்ளையோ, புலம்பலில் போதை கொண்டு மயங்கிக் கிடந்தார். எந்நேரமும் எதையாவது எண்ணி பயந்துகொண்டே இருப்பது அவரது வாடிக்கை. வேலை இன்றி அலுவலகத்தில் சும்மா இருந்தால், ஐயோ! நம்மை வேலையை விட்டு துரத்தி விடுவார்களோ,!? என்று பயப்படுவார். வேலை கொடுக்கப்பட்டால், ஒன்று சோம்பி திரிந்து தாமதம் செய்வார், அல்லது, சே! என்ன இவ்வளவு வேலை என அலுத்துக் கொள்வார்.. அவரது முகம் கடு கடுவென்று இருக்கும்! சரி, அப்படியாவது வேலையை நல்லபடியாய் முடித்து கொடுப்பாரா என்றால், அதுவும் இல்லை.. இந்த அலுப்பிலும் கடுப்பிலும் செய்யும் வேலை எப்படியிருக்கும்! ஏகப்பட்ட பிழைகளுடன், பலமுறை திருத்தல்களுக்கு உட்பட்டு அந்த வேலை படாத பாடு படும்...

சுந்தரம் பிள்ளையின் பிரச்சனை என்ன!! தனக்கு வேலை இருக்கிறது அல்லது இல்லை என்பதல்ல.. இந்த உலகத்தில் தனக்கு மட்டுமே இப்படி நடக்கிறது என்று என்னும் எண்ணம்தான். ஐயோ!! எனக்கு மட்டும் வேலையே தரவில்லை.! நான் ஒழுங்காய் வேலை செய்வதில்லையோ!! இப்படியெல்லாம் வீண் புலம்பலிலேயே காலத்தை கடத்துவது என்றும் நம் முன்னேற்றத்துக்கும் மன மகிழ்வுக்கும் வழி வகுக்காது.. மாறாக, வீண் மனக் குழப்பங்களுக்கும் நிம்மதியின்மைக்கும் தான் காரணமாய் இருக்கும்.

நம் சுந்தரம் பிள்ளைக்கு எப்போதும் ஒரு மனக்குறை! கடவுள் ஏன் நாம் விரும்புவதெல்லாம் கொடுப்பதே இல்லை!! நான் ஒரு எறும்புக்குக் கூட தீங்கிழைத்ததில்லையே என்று! இதெல்லாம் எங்கே அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார்!!நல்ல பட்டப் படிப்பு முடித்து விட்டு, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்துடன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது.!! கேட்பதற்கும் மேலேயே கொடுத்தால் கடவுள் கூட தீயவராய் தெரிகிறார் பாவம்!!

ஒரு முறை அவர் வேலை செய்து கொடிருக்கும்போது, எதிர்பாராத விதமாக, அவர் குழும நண்பரால் வேலை செய்ய முடியாமல் போக, இவரே மொத்த வேலையும் செய்ய வேண்டியதாய் இருந்தது! அதில் அரை பங்கு வேலை மற்றொரு அரை பாக வேலையின் பிரதி என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ந்தார் சுந்தரம்.சடாரென அடுத்த ஒரு சிறிய பகுதியை செய்து கொண்டிருந்த போது சே! என்ன இது இதில் ஒன்று கூட பிரதியாய் இல்லையே என்று கடவுளை மறுபடியும் வசை பாடத் தொடங்கினார்!!

அவர் மொத்தமாக செய்ய வேண்டிய வேலையை பாதியாய்க் குறைத்த கடவுள், ஏன் திடீரென்று கெட்டவராய் மாறிப் போனார்! அவர் மாறவில்லை! சுந்தரம் பிள்ளையின் மனம்தான் அவரை மாற்றியிருக்கிறது!! ஆக, மனம் ஒரு மாயக் குரங்கு என்று பெரியவர்கள் சொன்னதை இங்கே கண்கூடாகப் பார்க்கமுடிகிறது அல்லவா... முதலில் எதுவுமே கிடைக்கவில்லை என ஏங்கும்.. தேவையான அளவு கிடைத்த பின்பு, இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என ஆசைப் பட்டுக் கொண்டே இறுதியில், ச்சே! என்ன இது! இவ்வளவு வந்து விட்டது! இன்னும் கொஞ்சம் கூட வந்தால் தான் என்ன!? என நினைக்கும் போது தான் பல குறுக்கு வழிகளையும் தேடத் தொடங்கி பின் உள்ளதும் போய் தொடங்கிய இடத்துக்கே வந்து நிற்கிறது.!!

எனவே, இந்த நிமிடத்தை அனுபவித்து வாழுங்கள்! உங்களுக்கு விதிக்கப்பட்ட எந்த வேலையையும் ஒரு காதலுடன் செய்ய முயலுங்கள்!! வீண் கற்பனைகளைத் தவிருங்கள்...உங்கள் உழைப்பின் மீதும் கடவுளின் ஆசி மீதும் நம்பிக்கை செலுத்துங்கள்..எந்த நிலையிலும் மனதை அமைதியாய் வைத்த்திருக்க முயலுங்கள்..சுகமோ,துக்கமோ,எந்த உணர்ச்சிவசமான நிலையிலும் எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுக்காதீர்கள்! அது தவறாய்ப் போவதற்கு தான் வாய்ப்பு அதிகம்..

வாழ்க்கை என்ன! வானம் கூட உங்கள் வசப்படும்...