Monday 13 December, 2010

நான்!

தான் தான் எனும்
தலைவன் எனும்
இப்புவியே தன் மடியில் எனும்
மானுடம் தன் அடிமை எனும்
மனம் புகழ்ச்சி எனும் போதை கொளும்
விழி கர்வம் எனும் திரையைப் பெறும்
இறுதியில் மானம் எனும் உயிரைச் சுடும்
"நான்" துறந்து
"நாம்" இருப்போம் வாரீரோ மானுடரே!!

Saturday 13 November, 2010

மரணத்தின் வாசல்

மனம் மயக்கும் விழிகள் இல்லை

உளம் பறிக்கும் புன் சிரிப்புமில்லை

கை பிடித்து, தோள் கொடுத்து நடப்பதுமில்லை

மனம் விம்மும் விண்மீன்க் கனவுகளும் இல்லை
ஓரப்பார்வையால் உயிர்பறிக்கும் ஜாலங்களில்லை

காதோடு கதை பேசும் சரசங்களுமில்லை

விழியோடு விழி நோக்கி உளம் கலந்த தருணங்களின்

மிச்சம் மட்டுமே எஞ்சி நிற்கையிலும்

வாளின்றி குருதியின்றி மெல்ல மெல்ல உயிர் அறுக்கும்

ஊரும் உறவும் உற்ற தோழமையும் மனம் விட்டகலும்
உலகத்தின் வெளிவாசல் தாண்டி ஏனோ

மரணத்தின் வாசல் தேடி பயணிக்கச் சொல்லும்

காதல்!!

Wednesday 6 October, 2010

தலைப்பில்லா சிறுகதை...

தீபாவளி விடுமுறைகள் தொடங்கவிருந்த ஒரு வசந்த காலத்தின் முதல் நாள் பின்மாலைப் பொழுது...வழக்கத்தை விட கூடுதல் நேரம் உழைத்ததால் சற்று அதிகமாகவே களைத்திருந்தான் சிவா.. வழக்கம்போலவே மனதின் அயர்ச்சி எரிச்சலாய் நெஞ்சம் நிரப்பி முகம் எங்கும் வேர்வையாய் வழிந்தோடிக் கொண்டிருந்தது.. இம்முறையாவது ஊருக்கு வர வேண்டும் என்ற அம்மாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் நோக்குடன் ரயில் நிலையம் செல்ல முற்பட்டான்...இருந்த அயர்ச்சியில் நகரப் பேருந்தில் ரயிலடிக்குச் செல்வது உயிருக்கு உசிதமல்ல என உணர்ந்து அலுவலக வாசலில் நின்றுகொண்டிருந்த மூன்று சக்கர வாகனங்களுள் ஒன்றை அணுகினான்...
"சார் ஆட்டோவா??" - "தலைவா!!" என எழுதப்பட்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் அணுகினான்....
"எக்மோர் போகணும்னா.."
"த்ரீ பிப்டி குடுங்க சார்"
"ணா!!! என்ன ரொம்ப ஜாஸ்தியா கேக்குறீங்க!!! எப்பவும் நூற்றைம்பதுதானே வழக்கம்!!!" வழிந்தோடிய எரிச்சலில் சிலதுளி ஓட்டுனர் மீது பட்டுத் தெறித்தது...
"பெட்ரோல் விலையெல்லாம் ஏறிபோச்சு சார்!!! அங்கங்க ஒன்வே வேற ஆகிட்டாங்க... சுத்திதான் போகணும்!! கரெக்டாதான் சார் கேக்குறேன்..."
"சரி சரி.. இருநூறு ரூபா வாங்கிக்குங்க..."
"டூ பிப்டியா குடுங்க சார்..., உக்காருங்க...."
நகரத்தின் அத்துணை சாலை விதிகளையும் உடைத்து, சகல சாலை நெரிசல் இலக்கணங்களுக்கும் உட்பட்டு, ஆட்டோ ரயில் நிலையத்தை அடைந்தபோது ரயிலுக்கு இன்னும் அரை மணி நேரம் மிச்சமிருந்தது.... பன்னிரண்டு கிலோ மீட்டர்களுக்கு இருநூறு ரூபாய் அழுத புண்ணியத்தில் கூடுதலாய் வழிந்த ஏமாற்றம் கலந்த எரிச்சலை ஏந்திக்கொண்டு ரயில்நிலையத்தின் மக்கள் வெள்ளத்தூடே நடக்கத்தொடங்கினான் சிவா..
அவனை விட்டு விட்டு விரைந்த ஆட்டோ நகரப்பாதையின் நெளிவு சுளிவுகள் அறிந்து ஓடிக்கொண்டிருந்தது...
"என் உச்சி மண்டைல சுர்ருங்குது...உன்ன நான் பாக்கேல விர்ருங்குது...." காட்டுக்கத்தலாய் கத்தியது ஓட்டுனரின் அலைபேசி...
"டே விஜி... எங்க இருக்க!!?" மறுமுனை நகரத்தின் ஏதோ மறுகோடியில் இருந்து இரைய,
"எக்மொராண்டணா.. சவாரி வந்தேன்...இன்னானா??"
"ராயப்பேட்டைலருந்து கோயம்பேடு சவாரி போறியா? வாடிக்க கூப்டாங்க...நான் பெருங்குடில இருக்கேன்..."
"இல்லனா... நஸ்ரீன் இன்னைக்கு நேரமே வரசொன்னுச்சு...ஊட்டுக்கு போனும்ணா ..."
"சரி விடு..நான் முத்துவ கேட்டுப் பாக்குறேன்... "
"சரிணா"
எழும்பூர் தாண்டி அண்ணா சாலை வழியே திருவல்லிக்கேணியின் ஒண்டுக்குடித்தனங்களில் ஒரு தீப்பெட்டி முன்னாள் நின்றது வண்டி...
நாள்முழுதும் சவாரி போனதனால் வலித்த கழுத்தை நெட்டி முறித்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான் விஜி...

"சை...இந்த பாழாப்போன கேஸ் சிலிண்டர் எப்பதான் தீந்துபோவும்னு கணக்கு கூட வச்சிக்க முடில!!"
"யம்மா...யம்மா.. தொண்டை வலிக்குதும்மா..." காய்ச்சலில் படுத்திருந்த காதல் பரிசு ரம்யா குட்டி அனத்தினாள்...
"இருடி என் செல்லம்.. பக்கத்து வீட்டு கிரிஜாக்கா கிட்ட போய் கொஞ்சம் சுடுதண்ணி வாங்கியாந்து கசாயம் வச்சு தரேன்.. கொஞ்ச நேரம் பொறுத்துக்கடி என் தங்கமே..."
"இன்னா நஸ்ரீனு ... வீட்டு நெலம எல்லாம் எப்புடி போவுது..." என்றவாறே உள்ள நுழைந்தான் விஜி..
"வாய்யா...நீயெல்லாம் வீட்டுக்கு ஒரு ஆம்பளையா!! வீடு எப்பிடி போவுதுன்னு என்னைய கேக்குற...புள்ளைக்கு உடம்பு சரியில்ல, டாக்டர்கிட்ட கூட்டிட்டு போவுனும்னு ஒருவாரமா காதுல ஓதினுக்குரேன்...எங்கனா அத கேக்குறியா நீ??"
""ஏய் நான் என்னடி பண்ணுறது... ஒவ்வொரு சவாரிலையும் வர்ற காசெல்லாம் சவாரி முடிச்சு தெருத்தெருவா அலையைரதுலையே சரியா போவுது... மிச்ச காசெல்லாம் உன்கிட்டதானே குடுக்குறேன்... எனக்கு மட்டும் அவ புள்ளயில்லையா.. எனக்கு கஷ்டமா இருக்காது...?? லவ் பண்ணி கல்யாணம் பண்ணவ மாதிரியா நடந்துக்கிற.. சொம்மா எப்ப பாத்தாலும் மேல விழுந்து பிராண்டிகினே... தலைவர் படம் வேற அடுத்த வாரம் ரிலீசு.. கல்யாணத்துக்கு முன்னாடி மாதிரி பேனருக்கும் பாலுக்கும் காசு குடுக்குலன்னாலும் முத நாள் டிக்கெட்டுக்காச்சும் காசு வேணுமின்னு யோசிச்சுக்கிட்டுருக்கேன்... "

வெந்நீர் எடுத்து வர கையில் எடுத்த பாத்திரத்துடனே அவனை வெறித்து பார்த்துக்கொண்டே இருந்தாள் நஸ்ரீன்
"சரி சரி ரொம்ப முறைக்காதடி...நாள் பூரா அலஞ்சு திரிஞ்சு, கண்டவன்கிட்டையும் பேச்சு வாங்கிட்டு வீட்டுக்கு வரேன்... வந்த உடனே ஏறுனா கோவம் வராதா.... முத்தண்ணன் கிட்ட சொல்லி இன்னும் ஒரு வாரத்துக்கு டைடல் பார்க்கான்டையே ஸ்டாண்டு கேட்டுருக்கேன்... பாக்கலாம்.. பணத்த தேத்திட முடியும்னு ஒரு தைரியம் இருக்கு..."

"கண்டவன்கிட்டலாம் பேச்சு வாங்குவானுங்க... இங்க ஊட்ல வெந்து சாவுரவகிட்டதான் எல்லாத்தையும் காமிப்பனுங்க... கண்டவனுங்கதானே... அவனுங்ககிட்டையே மூஞ்சி காமிக்க வேண்டிதானே... ஹ்ம்ம்..." முணுமுணுத்தவாறே கிரிஜாக்கா வீட்டுக்கு வெந்நீர் வாங்க விரைந்தாள் நஸ்ரீன் ..

"யப்பா.... இவ வாய கடவுளால கூட அடக்க முடியாதுடா சாமி.." என்றவாறே ரம்யாவை நோக்கி சென்றான் விஜி...
"இன்னா கண்ணு... ரொம்ப வலிக்குதா... கவலை படாதடி செல்லம்.. நாளைக்கே உன்ன டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்... அவுரு ஊசி போட போறாரு..."
"யப்பா... ஊசி வேணாம்..." சிணுங்கியது குழந்தை..
"சரி...மருந்து குடுக்க போறாரு...பாப்பா அடுத்த வாரம் தலைவர் படத்துக்கு போவும்போது திரும்ப கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கலாம்.... "
"தே.... போன வாரம் இப்புடிதான் நீ பாட்டுக்கு வாங்கி குடுத்துட்ட... புள்ள ஒரு வாரமா கஷ்டப்பட்டுக்கிட்டுருக்கு... திரும்ப வாங்கித் தராராமில்ல..."
"வாம்ம்மா தாயே... வந்துட்டியா... இனி நான் புள்ள பக்கமே வரல... நீயே பாத்துக்க..."

சிலநாட்கள் உருண்டோட...தீபாவளிக்கு முதல் நாள்... கை நிறைய புதுத் துணிகளுடனும் பட்டாசுக்களுடனும் வீட்டுக்குள் நுழைந்தான் விஜி...

"யப்பா.. ஒரு வழியா டைடல் பார்க் சவாரி புடிச்சதுல இந்த தீபாவளி சமாசாரம் பிரச்சனையில்லாம முடிஞ்சுது.. ஹே நஸ் ரீனு... உள்ள இன்னும் என்ன பண்ணிக்கிட்டுருக்க... படத்துக்கு நேரமாச்சு... சீக்கிரம் கெளம்பு... ரம்யா குட்டி... இங்க பாத்தியா... அப்பா உனக்கு இந்த தடவ மூணு டிரஸ் வாங்கியாந்துருக்கேன்.... சீக்கிரம் ஓடியா... ராத்திரி தலைவர் படம் பாக்கிறோம்...விடிய விடிய பட்டாசு கொளுத்துறோம்... காலைல புதுத்துணி போட்டுகினுதான் தூங்குறோம்... ரைட்டா.... போ போய் உங்கம்மாவ சீக்கிரம் வர சொல்லு..."
"யம்மா... தலைவர் படத்துக்கு நேரமாச்சாம்... அப்பா உன்னைய கூப்புடுது..."
"ஏய்... நீ என்னடி தலைவர் தலைவர்னுகிட்டு.. அந்தாளுதான் புத்தி கேட்டு போய் திரியுறாரு.. நீயும்.... சரி சரி.. அப்பாவ சொன்ன உடனே கோவம் பொத்துக்கிட்டு வந்துருமே...வா போலாம்"
தலைவர் படம் திரையிடப்பட்டிருந்த அரங்கம் மக்கள் வெள்ளத்தில் கிட்டத்தட்ட மூழ்கியிருந்தது...அதிலும் குடியானவர்கள் எண்ணிக்கை வேறு கணிசமாக இருந்ததால் சுவாசிக்கக் கூட திணறினாள் நஸ் ரீன்...
"ஏன்யா...இப்படி கஷ்டப்பட்டுதான் இத பாக்குனுமா....எனக்கே மூச்சு திணறுது .. பாவம் புள்ள என்ன கஷ்டப்படும்.. அதே இப்பதான் ஒரு வாரம் படுத்து எந்திருச்சுருக்கு..."
"எ.. தலைவர் படண்டி...இப்பிடி பாத்தாதான் அதுக்கு ஒரு கெத்து..."
"ஆமாம்... அடுத்த வாரத்துலருந்து எப்படியும் தேட்டர்ல ஒருபய இருக்க மாட்டான்... அப்ப பாத்தா என்ன கேடு..." மறுபடியும் முணுமுணுத்தாள் நஸ் ரீன்....
குத்துப் பாட்டுடன் துவங்கி நவீன தமிழ் சினிமாவின் இலக்கணங்களை அச்சுப் பிறழாமல் பின்பற்றியபடியே படம் நகர்ந்து கொண்டிருந்தது.... ஒருவழியாய் வழக்கமாய் போடும் அதே இடத்தில் இடைவேளை விட்டிருந்தார் அந்த உலகமகா இயக்குனர்...
குடியானவர்கள் அனைவரும் எழுந்திருக்க முடியாமல் இருந்த இடத்திலேயே உருண்டு கொண்டிருக்க, மற்றவர்கள் கூட்டம் கதவு நோக்கி விரைந்தது...
" புள்ளைய பாத்துக்கயா" தலையில் அடித்துக் கொண்டே கழிவறை சென்றாள் நஸ் ரீன் ...
"யப்பா... கொக்க கோலா..." கொஞ்சியது ரம்யா குட்டி...
ஒரு ரூபாய் கூட பெறுமானமில்லாத அந்த குளிர்பானத்தை நாற்பது ரூபாய் கொடுத்து வாங்கின நூற்றுக்கணக்கான நவநாகரீக கனவான்களுடன் சேர்ந்து விஜியும் அந்த பானத்தை வாங்கி வந்தான்...
"வாடி என் செல்லம்... நான் வாங்கிதாரேன்... அம்மா வர்றதுக்குள்ள குடிச்சு முடிச்சுடு... இந்தா..."
"என்னடி... ஏதோ திருட்டு முழி முழிக்கிற!!" ஒரு எரிச்சலுடன் வந்து இருக்கையில் அமர்ந்த நஸ் ரீனின் கால்களில் தட்டியது அந்த குளிர்பான பாட்டில்...
"ஒ!! இது உன் வேலைதானா...யோவ்... போன வாரந்தானே டாக்டரு சொன்னாரு... இந்த கருமமெல்லாம் குடுத்தா புள்ளைக்கு தொண்டைக்கு ஒத்துக்காதுன்னு...கொஞ்சம் கூட புத்தியே இல்லையா!!"
"ஆமாம்... அந்த ஆளு கெடக்குறாரு.. அவருக்கு ஒன்னும் தெரியாது... புள்ள ஆசைப்படுது...திரும்ப வலிச்சா போய் திரும்ப மருந்து சாப்டுக்கலாம்..."
"ஆமா... இவரு அப்டியே படிச்சு கிழிச்சுட்டாரு... டாக்டர குறை சொல்ல... படிச்ச அஞ்சாம் கிளாசுக்கு இவ்வளவு அலப்பறையா.... எக்கேடோ கேட்டு ஒழிங்க"
படம் தொடங்க, திரையில் ஆழ்ந்தான் விஜி...
"யம்மா... தொண்டை எரியுதும்மா..."
"போடி... நான் சொல்ல சொல்ல கேக்காம உங்கப்பன் வாங்கி குடுக்குராருனு குடிச்சல்ல... போய் அந்த ஆளுகிட்டே சொல்லு..."
"யப்பா... தொண்டை எரியுதுப்பா..."
"கொஞ்ச நேரம் இருடி செல்லம்... வூட்டுக்கு போனவுடனே அம்மா கஷாயம் வச்சு குடுக்கும்... காலைல டாக்டர்கிட்ட போய் மருந்து சாப்ட சரியா போயிடும்... "
"யப்பா... நெஞ்செல்லாம் எரியுதுப்பா..." குரல் கலங்கி கம்மிவிட்டிருந்தது ரம்யா குட்டிக்கு...
"கொஞ்ச நேரண்டா,... இதோ கடைசி சீன் வந்துருச்சு..."
ஒரு மாதிரியாய் உடம்பெல்லாம் எரியத் தொடங்க...கோபித்துக்கொண்ட அம்மாவையும், கருமமே கண்ணாயிருந்த அப்பாவையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தது ரம்யா குட்டி...
"திரும்பி வருவோம்ல..." என்ற எழுத்துடன் படம் ஒரு வழியாய் முடிய... விளக்குகள் உயிர்ப்பிக்கப்பட்டன...
முதலில் ரம்யாவைப் பார்த்த நஸ் ரீனுக்கு பகீரென்றது!!! வாயெல்லாம் நுரை தள்ளி, கண்கள் மேல சொருகி வாய் கோணிக் கிடந்தது அந்த பிஞ்சு....
"யோவ்...புள்ளையா... புள்ள..." அதற்கு மேல நா அசைய மறுத்தது அவளுக்கு...
"என்னடி..." என்றவாறே திரும்பி பார்த்த விஜி அதிர்ந்தான்....
அவசர அவசரமாய் ரம்யாவை அள்ளி ஆட்டோவில் போட்டுக்கொண்டு அந்த அர்த்த ராத்திரியில் மருத்துவமனை தேடி அலைந்து திரிந்து இறுதியாக ஒரு மருத்துவமனைக்குள் நுழைந்த போது முழுதாய் ஒரு மணி நேரம் ஆகிவிட்டிருந்தது...
பேயறைந்தாற்போல வெறித்த பார்வையுடன் மருத்துவமனையின் வெண்ணிற வராண்டாவில் தனியே அமர்ந்திருந்தாள் நஸ்ரீன்
தீபாவளியன்று காலை... குளித்து முடித்து புத்தாடையுடன் அம்மாவின் கைமணத்தில் சுடச் சுட சிற்றுண்டி அருந்திவிட்டு அன்றைய செய்தித் தாளை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான் சிவா...
ஆறாம் பக்கத்தில் வலது ஓர மூலையில் பதினைந்து வரி கடைசி நேர செய்தியாய் வெளியாயிருந்த... "பூச்சிக் கொல்லி மருந்து கலந்த குளிர்பானத்தை அருந்தியதால் ஆட்டோ ஓட்டுனரின் மகள் - ஐந்து வயது சிறுமி மரணம்...ஆளுங்கட்சியின் ஆதரவுள்ள திரையரங்க நிர்வாகம் செய்த கலப்படமே காரணம் என்று குளிர்பான நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது......." என்ற செய்தி கண்டு, " ச்சே!! ஏன்தான் இந்த நாட்டு அரசியல் இவ்வளவு சாக்கடையா இருக்கோ!!??" என சலித்துக்கொண்டவாறே அதற்கு மேலாக அச்சிடப்பட்டிருந்த தலைவரின் அடுத்தபடம் பற்றிய செய்தியில் கவனத்தை செலுத்தி படிக்கத் தொடங்கினான் சிவா...

Wednesday 1 September, 2010

அவள்...


கண் கலந்து உளம் கனிந்து
கண்ட கனவுகள் மறப்பதில்லை...
புதைத்த நினைவுகளின் புகையும் நறுமணம்
நாசியை விட்டகலுவதுமில்லை...
எப்போதேனும் ஓர் கணம்
எங்கேனும் ஓர் இடம்
அவள் தடம் பற்றி
மரண வாயிலின் தாழ்நீக்கும்
தருணங்களுக்கும் குறைவில்லை...
பெயர் கேட்ட மாத்திரத்திலும்
விழிபார்த்த ஓர் கணத்திலும்
உயிர்பறிக்கும் அவள் ஜாலங்களும் குறைவதுமில்லை...
நொடிக்கொருமுறை அவள் பெயரைத் துதிக்கும்
இதயம் ஏனோ நின்று தொலைப்பதுமில்லை!!

Tuesday 10 August, 2010

விழிநீர்..நெடுநாளைக்குப் பிறகு... அவளுக்காக...


கார்கால மேகங்கள் அந்த சாயங்காலத்தின் வானத்தை நிரப்பிருந்தது. சென்னை மாநகரத்தின் கோடியைத் தொட்டுவிட்ட மனிதப் புள்ளிகளுள் ஒருவனான சிவா தன் அலுவலகத்தை விட்டு நடக்கத் தொடங்கியிருந்தான். சிக்னலில் பலூன் விற்கும் சிறுமி, சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கும் நாய்க்குட்டியை எடுத்து மார்போடு அணைத்தவாறே நடந்த கிழிந்த டவுசர் சிறுவன் என வழக்கமான நாளில் ஓடிக்கொண்டிருந்த சென்னை அவனை பாதிக்கவே இல்லை.. "நிலவே நில்..இது வைகாசி மாசம், விழியோரம் நீர் ஏன் வந்ததோ!??" சாலையோர தேநீர் நிலையத்தில் சூரியன் fm ஒலித்தது.. கண்கள் குளமாய்ப் போனது சிவாவுக்கு.. இன்றோடு வருடங்கள் மூன்றாகி விட்டது... இன்று போலவே இருக்கிறது... ஒரு வார்த்தை, ஒரு நிமிடம்...
"தேவதைய பாத்துருகீங்களா சார் நீங்க??"
"யாருமற்ற அந்த சிறு தெருவில் அவனுக்கு சற்று முன்னாள் சென்று கொண்டிருந்த அந்த பார்த்தசாரதி கலவரமாய் அவனைத் திரும்பிப் பார்த்தார்..
"நான் பாத்துருக்கேன் சார்.. ஏன் இதோ இப்போ கூட, கண்ண மூடினா, அந்த விழி இமைக்கிற அரை நொடில கூட.."
மிஸ்டர்.பார்த்து ஓடத் தயாரானார்...
"ஒரு வார்த்தை, ஒரு நிமிடம்.. எல்லாம் போச்சு சார்.. என் கனவு ஒட்டுமொத்தமா கலஞ்சு போச்சு சார்... சார்.. நம்ம மனசுக்கு பிடிச்சவங்ககிட்ட கடுமையா பேசறது போல வலி எதுவுமே இல்ல சார்.."
பார்த்தசாரதி ஓடத் தொடங்கியிருந்தார்...
ஒரு பெருமூச்சுடன் மனமெங்கும் அப்பிக்கொண்ட சோர்வோடு நடந்தான் சிவா...
பள்ளி முடித்தபின் பதின்ம வயதின் இறுதிக்கட்டத்தில் பொறியியல் கல்லூரியில் சேரும் எல்லா இளைஞர்/இளைஞியையும் போல கனவு, கல்லூரிக்கு வந்த பரபரப்பு, ஹையா..இனிமே சீருடை அணியவேண்டாம் என்ற குழந்தைத் தனமான குதூகலம், வீட்டை விட்டு வந்து விடுதியில் தங்கவேண்டியிருக்கும் சோகம், வண்ண ஆடைகளில் நிறைய பெண்களைப் பார்க்க வாய்க்கும் குறுகுறுப்பு என கலவையான மன நிலையுடன் வந்தவன்தான் சிவா..
எல்லாரையும் போல, எப்போதும் அரட்டை, நிறைய நண்பர்கள், பரீட்சை சமயத்தில் மட்டும் படிப்பு என வருடங்கள் ஓடிக்கொண்டிருந்தன.. மூன்றாம் ஆண்டின் இறுதி.. மும்முரமாய் பல நிறுவனங்களும் நேர்முகத் தேர்வுக்கு வரத்தொடங்க, சிரத்தையுடன் படித்துக்கொண்டிருந்தான்.. ஒருநாள் யதேச்சையாய் வெல்டிங் ஷாப்பில் அமர்ந்து ஆசிரியருடன் அரட்டை அடித்துக்கொண்டிருக்கையில் தான் அவளைப் பார்த்தான்...
"கொஞ்சம் நகருடீ.." அமைதியாய் இருந்த ஷாப்பில், கொஞ்சம் சத்தமாய் கேட்ட குரலுக்காக சட்டென திரும்பிப் பார்த்தான்.. வெண் பனிப் புகைப் படலத்துக்கிடையே, செக்கர் நிற சுடிதாரில் தேவதை... கண்ணை கசக்கிக் கொண்டு இரண்டாம் முறையும் பார்க்க... "டேய்.. என்ன, சிலிர்த்துட்டியா!! அது வெல்டிங் புகை டா!! நேத்து ரெண்டு தடவை "அழகிய தீயே" படம் பார்த்தப்பவே நெனச்சேன்.. இப்படி எதாச்சும் ரவுசு பண்ணுவேன்னு... அதுக்குன்னு இன்னைக்கேவாடா..."
நண்பன் கூறிய ஏதும் காதில் விழாதவனாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் சிவா.
வெல்டிங் முடித்து பர் நீக்கிக் கொண்டிருந்தபோது சட்டென ஒரு துகள் அவள் விரலைப் பதம் பார்த்துவிட, துளி ரத்தம் வெளி வந்தது... "ஸ்ஸ்ஸ்ஸ்...ஆ.." என அந்த பட்டாம்பூச்சி முதல் வார்த்தையை உதிர்த்தது..அவளையே பார்த்துக்கொண்டிருந்ததில், தன்னை மறந்து சிவா, "ஹய்யோ என்ன ஆச்சு!!!!??" என்று கொஞ்சம் சத்தமாகவே பதறிவிட்டான்...அவனை ஒரு மார்க்கமாய்ப் பார்த்தது விழிமை கலைத்த கண்ணீர் திரையிட்ட கண்களுடன் அந்த பட்டாம்பூச்சி.. முதல்முறையாய் வெட்கப்பட்டான் சிவா.. "டே!! இது வேறயா!! இன்னைக்கு இது போதும், போய் ஒழுக்கமா நாளைக்கு இண்டர்வியூ வுக்கு படி போ".. என விரட்டிய ஆசிரியரை ஜென்மவிரோதி போல பார்த்துக்கொண்டே விடுதிக்கு சென்றான்.. அப்பறம் எங்க படிக்கறது!! ஆனால் அவளை அடுத்த முறை பார்த்தால் வேலையுடந்தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டது...மானப் பிரச்சனையாசே!! ஆசைப்பட்டவாறே முதல் மூன்று சுற்று தேர்வாகி, இறுதி தனித்தேர்வுக்காக காத்துக்கொண்டிருந்தான்... அந்த உயர்நிலை அரசு பொறியியல் கல்லூரியில், குளிர்சாதன வசதி இருந்த ஒரே காரணத்துக்காக எல்லா நேர்முகத் தேர்வுகளுமே கணிப்பொறியியல் துறையில்தான் நடப்பது வழக்கம்..அப்போது தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கும், நிறுவன அதிகாரிகளுக்கும் வழிகாட்டவும், தேர்வின் நிலைகளை அறிந்துகொள்ளவும் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் உதவுவது வழக்கம்..கொஞ்சம் பதட்டத்துடன் தேர்வு அறைக்கு வெளியே நின்றுகொண்டிருந்தான் சிவா.. அடுத்து நீங்கதான் என்ற குரல் கேட்டு நிமிர்ந்தால், அவளேதான்!!!ஒரு நொடி துடிப்பதை நிறுத்தியது இதயம்..."மச்சி, இன்னைக்கு மட்டும் இண்டர்வியூ ல சொதப்புன, அவ்வளவுதான் பார்த்துக்க.." என்ற குரல் உள்ளிருந்து ஒலித்து இருந்த படபடப்பை வேறு அதிகரித்தது..."நல்லா பண்ணுங்க" என்றாள் சிறு புன்னகையுடன்... ஒருவழியாய் அரைமணி நேரம் உள்ளே அந்த ஆபீசர் போட்ட மொக்கைகளை சகித்துக்கொண்டு சிரித்த முகமாய் இருந்தபடியே வெளியே வந்துவிட்டான்..ஒருவழியாய் தேர்வாகி வேலையும் கிடைத்து விட்டது... அவளைப் பற்றி தகவல் சேகரிப்பதையே முழு நேர வேலையாக மேற்கொண்டான்... தேவதையின் பெயர் ஜெயஸ்ரீ, படிப்பது கணிப்பொறியியல் என தெரிய வந்தது... "பொண்ணு ரொம்ப நல்ல மாதிரிடா...ஒரு பையன்கிட்ட கூட பேசுறதில்ல, நம்ம மகளிர் அணித் தலைவி கொடுத்த தகவல் படி, காதலிக்கக் கூடாதுங்கிறது அவளோட தலையாய கொள்கையாம், வேற வேலை இருந்தா பாரு"
" அடப் பாவிகளா!! ஏதோ நான் மூணு வருஷம் பொண்ணுங்க பின்னாடி சுத்துரதையே வேலையா பண்ணின மாதிரி பேசுறீங்களேடா, நானே எத்தன பசங்கள காதலிக்காம தடுத்துருப்பேன்.. இப்போ எனக்கேவா!!!? சரி விடு, இத நான் பாத்துக்கறேன்" இதுதான் அவன் காதலைப் பற்றி நண்பர்கள் கேட்ட இறுதி வார்த்தை..அவள் செல்கிறாள் என்பதற்காகவே தினசரி கல்லூரி வளாகத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்லத் தொடங்கினான்..இப்படியே நாட்கள் ஓட, நிஜமாகவே அந்த பிள்ளையார் அவனுக்கு பிடித்துப்போகத் தோடங்கினார்..ஒருநாள் கண்மூடி பிரார்த்தனை செய்துகொண்டிருக்கையில் மீண்டும்,
"ஸ்ஸ்ஸ்ஸ்..ஆ..", அதே குரல்...பிரகாரத்தில் சுற்றிக்கொண்டிருந்த அவள் கால்களைப் பதம் பார்த்துவிட்டிருந்தது ஒரு சிறு தகடு,...
"அச்சோ என்ன ஆச்சு!!!"
"இல்ல.. நல்லா கிழிச்சுடுச்சு...."
"சரி இருங்க, என்றவாறே அதற்காகவே காத்திருந்தாற்போல தன் கைக்குட்டையைக் கொடுத்து கட்டிக்கொள்ள சொல்லிவிட்டு, ஆட்டோவுக்கு போன் பண்ணி, சக மாணவி ஒருத்தியையும் வரச்சொல்லி அனுப்பி வைத்தான்.. மூன்று நாட்களுக்குப் பின், மீண்டும் கோவிலில் அவள், சிநேகமாய்ப் புன்னகைத்தாள்..
"இப்போ பரவாயில்லையா?"
"ஹ்ம்ம்...ரொம்ப தேங்க்ஸ்.."
"ஹே, பரவால்ல" இப்படி தொடங்கிய பேச்சு, மூன்று மாதங்களில் பிறந்த நாள் வாழ்த்து குறுந்தகவல் பரிமாறிக்கொள்வது வரை வளர்ந்தது..ஆவலுடன் நெருகிப் பழகப் பழக, அவள் குடும்ப சூழலும், வளர்ந்த விதமும் புரிய வர, தன் வீடு நினைவுக்கு வந்தது அவனுக்கு..காதலை சொல்ல மனமே வரவில்லை.. இனிய நண்பனாய் அவளிடம் நடித்துவிட்டு, அவள் மேல் இருந்த காதலை எல்லாம், கவிதையாய் வடித்து வைத்தான்...
கல்லூரி இறுதி வருடமும் முடிந்தது... நல்ல நண்பனை பிரிகிறோமே என்ற சோகத்தில் அவளும், சொல்லவொண்ணா மனபாரத்துடன் அவனும் இறுதியாய் ஒரு முறை பிள்ளையார் பார்த்து அமர்ந்திருந்தனர்.... அப்போதும் ஒரு கணம் எண்ணினான், இப்போ சொல்லிடலாமா!!?
"அப்பா உன்ன அப்பப்போ போன் பண்ண சொன்னாரு..." என்ற குரல் அந்த எண்ணத்தை அப்படியே வயிற்ருக்குள் அழுத்தித் தள்ள, "கண்டிப்பா!" என்று ஒரு உலர்ந்த புன்னகையுடன் கல்லூரியை விட்டு கிளம்பினான்...
அலுவலகத்தில் சேர்ந்த பின், அவளை அதிகமாக தேடியது மனம்...அவளோ, தினம் ஒரு குறுந்தகவல், வாரம் ஒரு தொலைபேசி நலம் விசாரிப்பு என அளவாய் நிறுத்திக் கொண்டாள்.. சேர்ந்த நான்கு மாதங்களில் அறைக்கு அழைத்தார் மேலாளர்..
"நீ இன்னும் ஒரு மாசத்துல ஜப்பான் போறப்பா!! என்ன சொல்ற??"
"சார்....சரி சார்.."
"என்னப்பா, ஒரு குதூகலத்தையே காணோம் உன் முகத்துல!"
"அதெல்லாம் இல்ல சார்.."
நாட்கள் நெருங்க நெருங்க அனலாய் தவிக்கத் தொடங்கியது அவள் நினைவுகள்...அந்த வாரம் பேசும்போது அவளிடம் சொன்னால், மிகவும் சந்தோஷப்பட்டாள்.. "கலக்குடா!! வாழ்த்துக்கள்!!!", அவ்வளவுதான்..
அந்த நாளும் வந்தது... விமானத்தில் ஏறி, இருக்கைப்பட்டையை அணிந்தபோது அவனையும் அறியாமல் கண் கசியத் தொடங்கியது.... ஜப்பான் சென்ற பிறகு, அப்பா, அம்மா, நண்பர்கள் என யாருமே இல்லாத ஒரு தனிமை ஏற்பட, நினைவெங்கும் அவளே வியாபித்திருந்தாள்... அவளின் நினைவுகளில் மூழ்கி கவிதை எழுதுவதே ஒரு தினசரி செயலாக்கிப் போனது அவனுக்கு... ஆறு மாதங்களுக்குப் பின்னர், விடுமுறைக்காக இந்தியா செல்லத் தயாரானான்..இம்முறை அவளை எப்படியாவது பார்த்து மனதில் உள்ளதை எழுத்து வடிவிலாவது காட்டி விட வேண்டும் என்ற உறுதியுடன் எழுதிய கவிதைகள் அனைத்தையும் எடுத்து பையில் வைத்துக் கொண்டான்..ஒரு சிறு சோர்வுடனும், நிறைய படபடப்புடனும், சென்னை விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்து தன் சகோதரனைத் தேடத்தொடங்கின அவன் கண்கள், சட்டென ஒரு மின்னல்...
"அவளா, அது அவளேதானா!!! என் தம்பிக்கு பக்கத்தில் நிற்பது, அவளேதானா!! இரவு பத்து மணிக்கு! அதுவும் அவளுக்கு தொடர்பே இல்லாத சென்னையில்.. அந்த மைவிழி கலைத்த கண்ணீர் திரையிட்ட விழிகள் கூட அப்படியே இருக்கிறதே!! அழுகிறாளா, அவள் அழுகிறாளா!!" திகைப்பில் அழக் கூட தோன்றாமல் நின்றான் சிவா.. விஷமத்துடன் சிரித்தான் அருண்...அவனிடம் மட்டும்தான் அவளைப் பற்றி புலம்புவது வழக்கம்...
"அடப்பாவி, எதாச்சும் சொல்லிட்டானா!!" நினைத்து முடிப்பதற்குள் பார்த்தான்... இறுக மூடிய கைகளுக்குள் காகிதக்குப்பைகள், அவன் கவிதைக்குப்பைகள்... போய் அவள் எதிரே நின்றான், தலைகுனிந்து.... அவன் கரம் பிடித்து கண்ணில் வைத்துக் கொண்டு அழத்தொடங்கினாள் அவள்..அந்த கணம் அப்படியே உறைந்துவிடாதா என நினைத்தான் சிவா.... மனமெங்கும் இருந்த அவள் நினைவுகள் விழி வழியே வெளிவர, அவன் கண்களும் விழிநீரால் நிறைந்தது..."
உங்க வீட்ல ஒன்னும் பிரச்சனை இல்லையே" ,
"அதெல்லாம் பாத்துக்கலாம்" என்றான் அருண்...
"டே இதையாச்சும் நான் சொல்றேனே டா!!!",
"சரி சொல்லுங்க சார்"
"அதெல்லாம் பாத்துக்கலாம்" சிணுங்கல் மறைந்து சிரிக்கத் தொடங்கியது பட்டாம்பூச்சி..
அங்கு இருந்த இரு வாரங்களும் காற்றில் மிதந்து கொண்டிருந்தான் சிவா..முதல் முறையாக சந்தோஷமான காதல் கவிதைகளும் எழுதத் தொடங்கினான்...மூன்று வருடங்களாய் தேக்கி வைத்திருந்த காதல் முழுவதையும் அவள் மேல் அன்பாய் செலுத்தினான் அவன்...
விடுமுறை முடிந்து மீண்டும் ஜப்பான் செல்லவேண்டி வந்தபோது, இம்முறையும் சோகம் வந்தது, அவளை தனியே விட்டுவிட்டு செல்கிறோமே என்று... பல்லைக் கடித்துக்கொண்டு மாதங்களைக் கடத்திவிட்டு ஓடிவந்தான் இந்தியாவிற்கு... இம்முறை வந்து சேர்ந்த அடுத்த நாளே, அவன் சென்ற இடம், அவள் இல்லம்... அவளுக்கு அதிர்ச்சி தர வேண்டும் என வரும் நாளைக்கூட அவளிடம் சொல்லாமல் அவள் வீட்டுக்கு சென்றால், "வாங்க மாப்பிள்ளை சார்" என அவனுக்கு அதிர்ச்சி தந்தார் அவள் அப்பா!!
"அடிப்பாவி, அன்னைக்கு "உங்க வீட்ல ஒன்னும் பிரச்சனையில்லையா?" நு கேட்டதுக்கு இதுதான் காரணமா!!??" என்று மனதுக்குள் திட்டியவாறே அவளைப்பார்த்தால், பட்டாம்பூச்சியின் சிறகுபோல் தன் கண்களை சிமிட்டிக்கொண்டிருந்தாள் அவள்...
"எனக்கும் வேலை கிடைச்சாச்சே...சென்னையிலேயே!!"
"ரைட்டு விடு..., இனிமே இந்த ஜென்மத்துல இத விட பெரிய சர்ப்ரைஸ் என்னால உனக்கு கொடுக்க முடியாது, எப்போ வேலையில சேர போற?"
"அடுத்த மாசம், பதினொன்றாம் தேதி"
நாட்கள் உருண்டோட, அவளும் சென்னை வந்து சேர்ந்தாள்..நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்த அவர்கள் காதல் திருமணத்தை நெருங்கியது... முதலில் எதிர்த்த சிவாவின் அம்மா, அப்பாவும் ஜெயஸ்ரீ என்பதால் ஒரு கட்டத்துக்கு மேல மறுக்கவும் விரும்பாமல் ஒத்துக்கொண்டனர்...
திருமணத்துக்கான அழைப்பிதழ் தேர்வு செய்ய ஒருநாள் வெளியே செல்லும்போது, சிக்னலில் பைக்கை நிறுத்தினார் காவலர்...
"லைசென்ச எடுடா வெளிய..ஏன், துரை வண்டிய நிறுத்தி இறங்க மாட்டிங்களா?? பின்னாடி ஒரு பொண்ணு இருந்துட்டா போதுமே!!, அப்டியே ரெக்க கட்டி பறப்பானுங்க..." குடிமகன் வாடை தெளிவாக அடித்தது
"சார், கொஞ்சம் பாத்து பேசுங்க, நீங்க பாட்டுக்கு பேசிகிட்டே போறீங்க??"
என கையை ஒங்க தயாரானான் சிவா..
"ஹே சிவா, என்ன பண்ற, பேசாம வா"
"ஹே, நீ சும்மா இரு, இந்த ஆளை இன்னைக்கு நான் பாத்துக்கறேன்"
"சிவா, யாரு பெரிய ஆளுன்னு பார்க்கறதுக்கு இது நேரம் இல்ல, பேசாம வா, அவன்தான் குடிசுருக்கான்னு தெரியுதுல்ல சிவா வா பேசாம"
"ஹே சும்மா இருன்னு சொல்றேன்ல, என்னய்யா நெனசுக்கிட்டுருக்க, வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கிட்டுருக்க?"
"சிவா, அப்படியென்ன கோபம் வருது உனக்கு, வான்னு சொல்றேன்ல,"
"ஹே...சொன்னா கேட்க மாட்டியா" சிவந்த விழிகளுடன் திரும்பி அவளை ஒருகணம் முறைத்தான் சிவா...
காதல் இல்லை, அதில் நேசம் இல்லை, ஆசை இல்லை.... கோபம், வெறும் கோபம் மட்டுமே நிறைந்த விழிகள்...
சட்டென அதிர்ந்து, இரண்டடி பின்னோக்கி நகர்ந்தாள் ஜெயஸ்ரீ...ஹே ஹே, லாரி வரு.....
கடைசியாய் அவன் பார்த்ததெல்லாம், அதே, விழிமை கலைத்த கண்ணீர் திரையிட்ட பார்வை, இம்முறை அதிர்ச்சி கலந்து....
முடிந்தது அவன் கோபம், ஆசை, மகிழ்ச்சி, காதல் எல்லாமே....
"போச்சு சார், என் ஆசை, கனவு, எல்லாமே, ஒரு நொடி கோபத்துல, கரைஞ்சு போய்டுச்சு சார்..., நம்ம மனசுக்கு பிடிச்சவங்க நம்மகிட்ட கடுமையா பேசறது போல வலி எதுவுமே இல்ல சார்...." யாருமில்லா தெருவில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான் சிவா...
அவன் விழிவழிந்த கண்ணீரைத் துடைக்கும் பொருட்டு, யாவருக்கும் மழையை பெய்யனப் பொழிந்தார் வருண பகவான்....

Friday 6 August, 2010

தீவிரவாதி



ஒரு மெல்லிய சாரலுடன் முடிவுக்கு வந்தது எனது அந்த வியாழக்கிழமை அலுவலக நேரம்.. சுமார் பன்னிரு மணி நேரங்களை என் வாழ்நாளில் இருந்து பறிகொடுத்துவிட்டு,ஐநூறு ரூபாய்
பணம் வாங்கி வந்து வயிற்றைக் கழுவும் ஒரு சாமான்யன் நான். இரவு சுமார் ஒன்பது மணிக்கு அலுவலகத்தில் இருந்து நடந்து வீடு வந்து சேர்கையில் அறை
நண்பர்கள் யாவரும் துயிற்தாயின் மடியில்..வந்தவுடன் உறங்கப் பிடிக்காமல் தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன்..
“…க்காகவும், உங்க friends எல்லாருக்காகவும் அடுத்த song.. நான் நடந்தா அதிரடி… என் பேச்சு சரவெடி.. என்னை சுற்றும் காதல் வெடி நீ... நான் உந்தன்…..”
“என்ன மீனாக்ஷி இப்டி பண்ணிட்ட.. உனக்கு எவ்வளவு தரம் சொல்றது!? அவன் விஷயத்துல விளையாடாத விளயாடாதனு.. இப்போ பாரு, பத்து வயசுன்னு கூட பார்க்காம பச்ச கொழந்தைய தூக்கிட்டு போய்ட்டான்.. இப்போ என்ன பண்ண போறோம் கடவுளே!!!.. என்னங்க.. நீங்களே இப்டி….. “
“தன இணையைக் கொன்ற சிறுவனை பழி வாங்க வீடு தேடி வந்த நல்ல பாம்பு..உயிரை உறைய வைக்கும் உண்மை!! நடந்தது என்ன!!?.. ஒரு சிறு விளம்பர இடைவேளைக்குப் பிறகு… அம்மன் T R Y முறுக்குக் கம்பிகள் வழங்..”
நம் தமிழ் தொலைக்காட்சிகள் எல்லாமே எரிச்சல் தர,சட்டென ஒரு ஆங்கில செய்தி சேனலுக்கு மாறினேன்..

“அடுத்து வரும் செய்திகள்.. இந்திய கலாசாரத்தை அவமதிக்கிறதா TIME பத்திரிகை? சிறு விளம்பர இடைவேளைக்குப் பிறகு... boys always like less…. AXE now, costs less... now just for hundred and twe….”

“the meaning of being lonely.. is this the feeling I need to walk with….tell don’t me why… I cant be there. Where you are… there’s something missing in ma….”

“அந்த மாத இதழின் ஜூலை மாத பதிப்பில், my own private India எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஒரு நகைச்சுவைக் கட்டுரை,அமெரிக்காவாழ் இந்தியர்களிடையே பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. இந்திய கலாசாரத்தையும்,வழிபாட்டு முறைகளையும் கேலி செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு தொடர்கிறது பல வருடங்களாக அங்கே வசிக்கும் மருத்துவர்கள், பொறியாளர்கள் என பல தரப்பிலிருந்தும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள….”
“அது வேற ஒரு நாடு, இப்போ காஷ்மீர் பிரச்சனைய நாங்க பார்த்துக்கரோம்னு சொன்னா அமெரிக்காவ நாம அனுமதிப்போமா, அதே மாதிரிதான் இலங்கையும், அது இலங்கையோட உள்நாட்டுப் பிரச்சனை, அதுல நாம எப்படி தலையிட முடியு…. “
“ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் தொடர்ந்து வருவது குறித்து நம் வெளியுறவுத் துறை அமைச்சர் மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக விரைவில் ஆஸ்திரேலிய அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரி… “
“கதையல்ல.. கறுப்பு சரித்திரம்… ஒரு ஒட்டு மொத்த கிராமத்தையே கடலுக்குள் புதைத்து விட்ட குற்ற.....”
“நான்கு கரங்களையும், துதிக்கையும் உள்ள உருவத்தைக் கடவுள் என வழிபடுபவர்களை எப்படி புத்திசாலி என எடுத்துக் கொள்வது!? என்பது போன்ற சொற்கள் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மனதை மிகவும் புண்படுத்துவதாகவும், இந்தியாவின் பெரும்பான்மை மதமான இந்து மதத்தை அவமதிப்பதாகவும் இருப்பதாக கொதித்துப் போய் இருக்கின்றனர்..இதற்கு அடுத்த இதழில் TIMES பத்திரிகை மன்னிப்பு கேட்டிருந்தாலும், வெளியிட்டது மாபெரும் தவறு என்பதே பெரும்பாலான இந்தியர்களின் கருத்தாக….”
“ராஜா சோழன் எடுப்பித்த தஞ்சை பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆனதை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என பல சமூகஆர்வ தொண்டு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.. ராஜ ராஜ சோழன் ஆட்சி காலம் தமிழர்களின் பொற்காலம் என பொதுவாக
வரலாற்று ஆய்வாளர்களிடையே அழைக்கப்படுகிறது… இந்தியா மட்டுமின்றி, கடல் கடந்து, இலங்கை, லட்ச, மினிக்காய் மற்றும் அந்தமான் தீவுகளையும் சோழர் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்த சக்தி வாய்ந்த கடற்படையை அவர் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்….”
“...சிவகாமி…நாய் நம்மைப் பார்த்து குரைக்குதுன்றதுக்காக, நாம அதா பாத்து குரைக்க முடியமா?? இல்ல அது நம்மள பார்த்து குரைக்கிரதுனால நாம திருடன்னுஆயிடுமோ!??.."
“...களின் தொடக்கத்தில் சில மருத்துவர்கள் எங்கள் நகரத்துக்கு வந்த பொழுது நாங்கள் இந்தியர்கள் அனைவரும் புத்திசாலிகள் என நினைத்திருந்தோம்.. பிறகு, அவர்கள் தம் வியாபாரி உறவினர்களைக் கொண்டு வந்த பொது, நாம் நினைத்த அளவு புத்திசாலிகள் அவர்கள் இல்லை என நினைத்தோம்.. அதன் பிறகு, வாடகை ஊருந்து ஓட்டும் உறவினர்களையும் கூட்டி வந்த பொழுது, இந்தியா ஏன் இன்னும் ஏழை நாடாக இருக்கிறது என அறிந்து கொண்டோம்… கட்டுரையின் இந்த பகுதி தங்கள் மனதை மிகவும் புண்படுத்துவதாய் இருப்பதாக வெகுண்டெழுந்துள்ளனர்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள்…”
“கொடு எங்கள் நாடே.. கடல் வாசல் தெளிக்கும் வீடே.. பனைமரக் காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்ப்போமா… முகத்தில் புன்னகை எரிப்போம், உடம்பை உயிருக்குள் புதைத்தோம்… வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோ…..”
சட்டென மின்சாரம் நின்று எங்கும் அந்தகாரம் சூழ, என் விழிகளில் இருந்து இருதுளி நீர் தெறித்தது… நான் பிரிவினைவாதியா? தீவிரவாதியா?
தேசவிரோதியா?? இல்லை மனிதனா!?? கேள்விக்கு விடை தெரியும் முன்னரே உறங்கிப் போனேன்…..

Wednesday 23 June, 2010

அருள்...


புகை நிரப்பும் இருசக்கர வாகனங்களும், நேரடியாக புகைபோக்கியிலிருந்து கொசு(நுரையீரல்) ஒழிப்பு மருந்தை விநியோகிக்கும் நகராட்சி வண்டிகளும், எதையோ தேடும் நோக்குடன் உயிரைப் பணயம் வைத்து செலுத்தப்படும் சீருந்துகளும் நிறைந்த அந்த மாபெரும் நகரத்தின் பரபரப்புகளில் இருந்து ஒதுக்குப் புறமாய் தியானத்தில் அமிழ்ந்திருந்தது அந்த குக்கிராமம். மதியம் 3 1/2 மணிக்கு சூரியன் தன அனல்காற்றை பூமாதேவியுடன் சேர்ந்து அந்த ஊருக்கு இலவசமாய் வழங்கிக் கொண்டிருந்தார். யாருமற்ற அந்த மண்சாலையின் புழுதியை அடக்கும் வண்ணம் சிலதுளிகள் வீழ்ந்தன மண்ணில்..பெண்கள் வாசல் தெளிக்கத் தொடங்கியிருந்தனர். "செல்லாத்தா, செல்ல மாரியாத்தா என் சிந்தையில்..." எல்.ஆர்.ஈஸ்வரி அந்த ஊரின் கடைக்கோடியில் இருந்த மாரியம்மன் கோவிலில் ஒலிக்கத்தொடங்கினார். தொடங்கப்பள்ளி சிறார்கள் துள்ளலுடன் கோவிலை நோக்கி ஓடத்தொடங்கினர். அடங்கியிருந்த புழுதியை மீண்டும் கிளப்பிக்கொண்டு நான்கு சக்கர அரசுப் பேருந்து அந்த சாலையை அடைந்தது.
தனக்கு முன்னாள் எழுந்த புழுதியை அடக்கி சாலையை தரிசிக்கும் எண்ணத்துடன் கையை ஆட்டிக்கொண்டே கீழே இறங்கினான் குமாரசாமி.
"யோவ் பெருசு.. ஊரு வந்துருச்சு இன்னும் வாயப் பொளந்துகிட்டு தூங்கிக்கிட்டு கெடக்க..ஏறங்குயா கீழ"
பேருந்தின் நடத்துனர் உச்சகட்ட மரியாதையுடன் ஒரு வயோதிகரை கீழே இறக்கிவிடும் சத்தம் தெளிவைக்கேட்க, வருத்தம் தோய்ந்த புன்னகையுடன் சாலையைக் கடந்து மறுபக்கம் வந்தான் குமாரசாமி.
"டே கொமாரு!! என்னடா இப்பதான் வாரியா!!?"
"ஆமா மாப்ள!! கம்பெனில எங்கத்த லீவு குடுக்கானுங்க ஒரு நா தான் கெடச்சுது.."
"சரி சரி ஓடியா கோயிலுக்கு போவோம்"
"நீ போ மாப்ள, நான் இந்தா வீட்டுக்கு போய் ஒரு எட்டு மூஞ்சிய காமிச்சுட்டு வந்துடறேன்"
நண்பன் பதிலுக்கு காத்திராமல் வீடுநோக்கி விரைந்தான் குமாரசாமி.
இந்த எழவெடுத்த அடுப்ப எப்பிடி பத்த வைக்கனு எனக்கு இது வர தெரில! நானும் ஆறு மாசமா இது கூட மாரடிக்கேன்"
"ஏண்டீ, நான் உன்கூட இருவது வருஷம் மாரடிக்கிலையா!! ஒரு அடுப்புக்கே இப்பிடி சலிச்சுக்கிரவ!? இதாச்சும் பேசாம வாய மூடிக்கிட்டு கெடக்கும்"

மா.. என்ற குரலுடன் குமார் வீட்டினுள்ளே நுழைய, அவர்கள் உரையாடலும் சற்றே தடைபட்டது..

ஏல ராசா!! எப்பிடிய்யா இருக்க! பாத்து மாசமாச்சே டாஇப்டி கறுத்து போய் கெடக்க!? வேலை ஜாஸ்தியா கண்ணு?

அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.. வெயில் வருஷா வருஷம் ஜாஸ்தியா யிகிட்டே போவுதில்ல..சரி, என்ன! நான் வாங்கிக்குடுத் அடுப்புல சமைக்குறதே இல்லியா!!??

அட நீ வேற கொமாரு, உங்கம்மாளுக்கு அத எப்படி பத்த வைக்கனே இன்னைக்கு வர தெரில..இப்போ கூட அதுக்குதான் பொலம்பிகிட்டு கெடந்தா..

ஏன் மா!! நான் போன் பண்ணப்போவே என்கிட்டே கேட்க வேண்டியதுதானே..

இல்ல ராசா, நீயே வேலை முடிச்சு களைப்பா இருப்ப, அதான்என்று ம்மா முடிக்கும் முன்னரே விழியோரம் நீர் தெறித்தது குமாருக்கு..

அட போம்மாசரி கொண்டா அந்த அடுப்ப இப்டி..எப்படியும் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் ஓரளவு பணம் சேர்ந்ததும் ஊரை ஒட்டி சிறிது நிலம் வங்கி ஊரிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்துகொண்டே அடுப்பை பற்ற வைத்துவிட்டு குளிக்க சென்றான்.

குளிக்கும் போதே ராசுவின் நினைவு வந்தது குமாருக்கு.. பத்தாம் வகுப்பு முடித்ததுமே, குடும்பச் சூழலால், படிப்பைத் தொடர முடியாமல் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை நேரிட்டது குமாருக்கும் ராசுவுக்கும்..குமார் மாசமானால் சம்பளம் என்ற நினைப்புடன் பட்டணத்துக்கு வேலைக்கு செல்ல, அப்பாவும் இல்லாது போக, அம்மாவையும், இந்த ஊர் விவசாயத்தையும் விட்டுவிட்டு வரப்போவதில்லை என்று தைரியமாய் நின்றவன் ராசு..


இப்போது பட்டணத்தையும் அந்த மக்களையும் பார்த்துவிட்டபின், ராசுவின் மேல் இருந்த மரியாதையும் பாசமும் கூடிக்கிடந்தது..


குளித்து முடித்து வந்த போது அம்மாவின் கைப்பக்குவத்தில் சூடான இட்லியும், காரப் பணியாரமும் கூடவே தொட்டுக்கொள்ள தும்பைப்பூ தேங்காய் சட்னியும் தயாராய் இருக்கவே, ஒரு பிடி பிடித்துவிட்டு, பல தையல் கண்ட அப்பாவின் தோல் செருப்பை

மாட்டிக்கொண்டேஅம்மா, நான் கோயிலுக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துடறேன்என்று குரல் கொடுத்து விட்டு கிளம்பினான்..

“அடேய், வீட்டுக்கு வந்து இன்னும் ஒரு மணி நேரம் கூட ஆவுல.. அதுக்குள்ள எங்கடா ஓட்றவன்!?” அப்பாவின் குரலை சட்டை செய்யாமல் கோயில் நோக்கி விரைந்தான்..

ஊரின் கிழக்கு எல்லையில் புதியதாய் வர்ணம் தீட்டப்பட்டு, பக்கத்து பட்டணத்தில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட கணபதி சவுண்ட் சர்வீஸ் ஸ்பீக்கர்கள் கட்டப்பட்டு கம்பீரமாய் நின்றது. கோவிலுக்கு நூறடி தள்ளிதான் ராசுவின் குடிசை இருந்தது..

ராசு...”, வாசலில் நின்று குரல் கொடுத்தான் குமார். வாசல் தெளிக்கப்பட்டும் கோலம் போடாமல் இருந்தது ஏதோ உறுத்திற்று.. வாடா மாப்ள, என்றவாறே வெளியே வந்தான் மொக்கராசு.

என்ன மாப்ள, கோலம் கூட போட்ல! அம்மா ஊர்ல இல்லியா என்ன?? இல்ல டா.. கொஞ்சம் உடம்பு சரி இல்ல.. என்னடா ஆச்சு!? சொல்லவே இல்ல!!?

உள்ளே சென்றால் கிழிந்த கந்தல் துணியை கிடந்தால் கமலாம்பாள், மொக்கராசுவின் அம்மா.. விடாது இருமலுடன், கண்ணெல்லாம் உள்ளே போய் கிடக்க..

வா குமாரு, எப்டி இருக்க? என்ற குரல் சுரத்தே இன்றி ஒலித்தது.. அதிர்ந்தான் குமார். இயல்பாகவே அதிக சத்தமாய் பேசும் குணம் கமலாம்பாளுக்கு.. ஆண்கள் நிறைந்த ஊர்ப் பஞ்சாயத்தில் கூட, எலேய்! என்ற குரலுடன் கமலாம்பாள் பேசத்தொடங்கினால் ஊரே அமைதியாய் கேட்டு நிற்கும்.. வெறும் சத்தம் மட்டுமல்ல, அவள் சொல்வதில் பல அர்த்தங்களும் இருக்கும் என்பது ஊர் அறிந்த உண்மை.. அவளை இப்படி பார்த்ததும் மனசு கனத்தது குமாருக்கு..

உடம்ப பாத்துக்கங்கம்மா, என்று சொல்லிவிட்டு வெளியே திண்ணைக்கு வந்தான்.. என்னடா ஆச்சு!? போன வாட்டி நான் வந்தப்ப கூட நல்லாதானே டா இருந்தாங்க..

அட போன மாசம் வரைக்கும் நல்லாதான் டா இருந்துச்சு.. இங்க கெழக்கால சிமெண்ட் பாக்டரி ஒண்ணு திறந்துருக்குறானுங்க, அதுக்கு பின்னாடிதான் நாங்க பாக்குற காடு இருக்கு.. அங்க இருந்து பொகைய மேல கொண்டி விடாம அந்த கோழைய கீழேயே விட்டுபுட்டானுங்க, அந்த போக காத்துல கலந்து மூச்சுலையும் கலதுருச்சு, ஆத்தாவுக்கு ஏற்கனவே கொஞ்சம் மூசெறைப்பு இருக்குல்ல.. அதோட சேர்ந்து ஆஸ்துமாவா ஆயிருச்சாம்.. அது மட்டுமில்லாம நெல்லு மேல எல்லாம் அந்த சாம்பல் படிஞ்சு கெடக்கு டா.. எம்புட்டு கழுவுனாலும் திங்கிற சோத்துல சாம்பல் இருக்க மாறியே இருக்கு மாப்ள.. ஊர் பஞ்சாயத்துல சொன்னா??,

அங்கதான் நம்ம ப்ரெசிடென்ட் மவன் சூப்பெர்வைசரா வேலை பாக்குறான்.. அதனால கண்டுக்கிடவே மாடிங்கிராய்ங்க.. என்றவாறே கசிந்த விழிகளை துடைத்தான் ராசு..

சரி வா, மாரியாத்தா இதுக்கு ஒரு வழி காட்டாமையா போயிருவா, வாடா கோயிலுக்கு போவோம், என தோளில் கைப்போட்டவாறே கோயிலுக்குள் நுழைந்தனர் இருவரும்.. "மாரியம்மா, எங்கள் மாரியம்மா".. என்று உள்ளம் உருக்கிக்கொண்டிருந்தார் எல்.ஆர்.ஈஸ்வரி..

அம்மனுக்கு தீப ஆராதனை காட்டப்பட்டு, சக தெய்வங்களுக்கும் ஆராதனை முடிந்த பின்பு கோவில் பூசாரி உடுக்கு அடிக்கத் தொடங்கினார்..


முதலில் அருள் வந்தது புது கருப்புக்குதான்.. இளகிய பார்வை சற்றே கடிந்து, பின் அம்மனை நோக்கி வெறித்த பார்வையாய் மாறத் தொடங்கிய போது சுற்றி நின்றிருந்த அந்த சிறுவர்கள்.. ஹே ஹே என பலமாக கத்தத் தொடங்கினர்.. கடிந்த பார்வை சிவந்த விழிகளாய் மாற, கைகள் முறுக்கேறின..சட்டென யாரோ கொடுத்த எலுமிச்சை பழம் அவசரமாய் அவர் கையில் திணிக்கப்பட்டது.. அதை வாங்கி ஒரே கடியில் பிழிந்த புது கருப்பு, கருப்ப சாமி கோயில் இருந்த திசை நோக்கி ஒரு கணம் வெறித்து விட்டு, இதோ வரேண்டா!! என்ற குரலுடன் சிறுத்தை போல் ஓடத் தொடங்கினார்..

அடுத்து கூட்டம் கள்ளியடி கருப்புக்காக காத்திருக்கத் தொடங்கியது.. உடுக்கை இன்னும் பலமாக அடித்தார் பூசாரி..கூட்டம் கள்ளியடி கருப்பு கோவிலின் வேலை தூக்குபவரின் அருகில் நின்று அமைதி காத்தது.. ஊதற்காற்று ஒரு வித அமானுஷ்ய ஒலியுடன் வீசிக்கொண்டிருந்தது.. உடுக்கை சத்தம் இன்னும் தீவிரமானது.. சட்டென ராசுவின் கண்கள் சிவந்தன..அம்மனையே வெறித்துப் பார்க்கத் தொடங்கினான்.. அனைவரின் கவனமும் அம்மன் மீது இருக்க, சட்டென ஒரு உறுமல் சத்தம் வந்தது ராசுவிடம் இருந்துகூட்டம் மொத்தமும் இப்போது ராசுவை திரும்பிப் பார்க்க, ஹேய்ய்என்ற உறுமலுடன் அம்மனை வெறித்துப் பார்த்து ஆடத் தொடங்கினான் ராசு

பொதுவாய் ஊரில் காப்பு கட்டியிருக்கும்போது இவ்வாறு சிலருக்கு அருள் வருவதுண்டு.. பூசாரி விபூதி அடித்து மந்திரிக்க, அப்படியே அது அமைதியாய்ப் போகும். இரு நாட்கள் இரவு கோவிலில் தங்கி மூன்றாம் நாள் வீட்டுக்குப் போக, அவர் சகஜ நிலைக்கு திரும்புவார். அம்மாதிரி சமயங்களில் அம்மன் சில சமயம் உத்தரவு கொடுப்பதுண்டு

இப்போதும் ஆத்தாவின் உத்தரவு ஏதேனும் கிடைக்குமா என்ற யோசனையுடன் ஊர் பூசாரி ராசுவின் அருகில் வந்து கேட்டார்..

"ஆத்தா, உத்தரவு இருந்தா சொல்ல வேணும்.. "

டேஎன்னடா பண்றீங்க!! எனக்கு மூச்சு முட்டுதுடாநெஞ்செல்லாம் எரிஞ்சு கெடக்குடா!!! படையல்என்னத்த கலந்தீங்க!!!!”

ஆத்தாவிடமிருந்து இந்த வார்த்தைகள் வந்ததும் ஊர் மொத்தமும் துடித்துப் போனது

முதலாளி என்று அழைக்கப்படும் ராமசாமி ராசுவின் அருகில் வந்து, கைகட்டி வாய் பொத்தி அம்மனின் உத்தரவைக் கேட்க ஆயத்தமாய் நின்றார்..

ஆத்தா, வழக்கமா உனக்கு படிக்கிற கோவில் நிலத்து நெல்லும், இந்த அடிமை வீட்டு பயிருந்தானே ஆத்தாவெளங்கலியே இந்த மக்குப் பயலுகளுக்கு… கொஞ்சம் புரியற மாதிரி சொல்ல வேணும் ஆத்தா"

இல்லடா... நெல்லுல ஏதோ கலந்துட்டிங்க டாஅதோட உசுர கொன்னுபுட்டிங்கசுடுகாட்டு சாம்பல் வாட அடிக்குதுடா அந்த நெல்லுலஅசலூர்க்காரன் எதையோ கொண்டுவந்து என் மண்ணுல தெளிச்சு என் உடம்ப ரணமாக்கறாண்டா.. அத மொதல்ல தடுத்து நிறுத்துங்க.. அடுத்த அமாவாசை அன்னிக்கு அந்த நெலம் , என் உடம்பு சுத்தமாகனும்இல்ல, நான் இந்த ஊர்ல தங்கமாட்டேண்டா…”

புரியுது ஆத்தா, புரியுது.. காசுக்கு ஆசைப்பட்டு இந்த அநியாயத்த தட்டிக்கேக்காம விட்டது எங்க தப்புதான்.. அதுக்காக எங்கள பெருசா தண்டிசுராத ஆத்தா.. உடனே நாங்க அத சுத்தம் பண்ணிடறோம் உத்தரவு குடுக்கணும் ஆத்தாஇந்த திருவிழாவா கூட இருந்து நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்… “

சடாரென விபூதியை வாரி ராசுவின் முகத்தில் இறைத்தார் பூசாரிநினைவிழந்து சரிந்தான் ராசு

அன்று இரவு சாமி ஊர்வலம் எல்லாம் முடித்து, அம்மனை கோவிலுக்குள் இறக்கி, ஊர் அடங்கிய பின்னர், காலாற நடந்து கொண்டிருந்தான் குமார் . கோவிலுக்கு எதிரே தேர் நிறுத்தும் கொட்டகையின் படியருகே ஏதோ ஒரு உருவம் முழங்காலைக் கட்டிக்கொண்டு குலுங்கிக் கொண்டிருக்கக் கண்டான்சிறு வியப்போடும் கொஞ்சம் அச்சத்தோடும் அதை நெருங்கினான் . பார்த்தால், ராசு

என்ன சாமி, இங்க உக்காந்துருகீங்க?? அந்த சிமெண்ட் பாக்டரி அநியாயத்த நிறுத்த எனக்கு வேற வழி தெரில மாப்ள.. நான் செஞ்சது தப்பாடா??

ஒரு சிறு புன்சிரிப்போடு அவனைப்ப்பார்த்து இல்லை என தலை அசைத்துவிட்டு, மன அமைதியுடன் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான் குமார்

(கிராமப் புறங்களில் இன்றும் நடக்கும் இந்த காப்பு கட்டுதல் அல்லது குடியழைத்தல் என்னும் திருவிழாவின் போது, நாடு நாயகமாய் ஊரின் மாரியம்மன் கோவில் இடம் பெறும். உடுக்கும் மேளமும், பழந்தமிழ் பறையும் ஊரதிர ஒலிக்க, ஆலய மணியும் டங் டங் எனும் ஒலியுடன் ஒலிக்கும் நேரம், தீபங்களுக்கு இடையில் சந்தனமும், குங்குமமும் இட்டு, சிகப்பு நிற பட்டுடுத்தி, தீபாராதனைத் தட்டின் கற்பூர ஒளியில் தெரியும் அம்மனின் முகம் அங்கே ஒரு அமானுஷ்ய சூழலை உண்டாக்கும். அப்போது, இவ்வாறு உடுக்கும் அடிக்கப்படும்போது, யாரேனும் ஒருவருக்கு அருள் வந்து, அவர் ஊரின் காவல் தெய்வமாய் விளங்கும் கருப்பு கோயிலுக்கோ அய்யனார் கோயிலுக்கோ ஓடிச்சென்று, அங்கே நடப்பட்டிருக்கும் வேல் அல்லது பெரிய கத்தியை எடுத்து வந்து ஆடத் தொடங்குவார். பொதுவாய் ஒரு முறை இந்த கத்தியை சுமக்கத் தொடங்கியவர் இறக்கும் வரை பொதுவாய் அவரேதான் வருசா வருடம் சுமப்பார். இதையும் பழந்தமிழ் நாகரிகத்துள் ஒன்றாகவே நான் கருதுகிறேன்.)