Friday 11 November, 2011

நீராடிய பொழுதுகள்!


நீராடல் 1...

நவம்பர் மாத நள்ளிர வோர்நாள்  
கடற்கரை மணலில் நடைபயின்றிருக்கையில்
கடலின் அலையாய் மனதும் அலையும்;
மதியும் வெளிவர அஞ்சும்  வெயிலில்
கடலின் அலையென அலையின் துளியென
ஆடித் திளைத்து
ஆடை காய மணலில் கிடந்து
கைகள் கோர்த்து அவளுடன் நடந்த
நினைவின் எச்சம் இதழில் புன்னகை தெளிக்க
மலர்ந்தேன்!!;
சட்டென வானம் பன்னீர்த் தூவ,
சிதறிய துளிகளில் ஒன்றென் இதழில் தெறித்து
தீஞ்சுவை தந்தது
ஒருகணம் வியந்தேன்! பின்
யாரோ எங்கோ சொன்னது நினைந்தேன்
இன்னும் நனைந்தேன்!
தேவதைகள் குளித்த நீரது ஆவியும் ஆகும்
பின் அது மழையாய்ப் பொழிய வாரம்
ஈராறும் ஆகும்!

***
நீராடல் 2...

விடிந்தும் விடியாக் காலை
வெள்ளி முளைக்கும் வேளை
துயில்களைத் தெழுந்து
கூதிர்காலக் குளிர்நீர் கொண்டு
செந்நிற மேனியை பொன்னென ஆக்கி
கார்குழலெடுத்து  திறமாய் அலசி
அலசிய குழலை நுனியில் முடிந்து
துயிலின் மடியில் கிடக்கும் என்னை
எழுப்பிட வருவாள்
அலசிய குழலில் அங்கிங்கிருக்கும்
சிற்சில துளிகள் -   
(அவளுக்கது பனித்துளிகள்
எனக்கோ அவை பன்னீர்த்துளிகள்!)
குனிந்தவளென்னை  எழுப்பும் போது
நுதலில் கிடக்கும் குழலிழை வழியே
ஓர் துளி சட்டென குதித்து அவளின்
 நாசியில் சறுக்கி - எனை எட்டிப் பார்க்கும்
வாய் பிளந்ததனை ரசிக்கும் நேரம்
சட்டெனக் குதிக்கும்!
மோட்சம் அடைவோம்
நானும் அப்பனி(பன்னீர்த்)துளியும்!
***

நீராடல் 3...

இரண்டெனக் கிடந்து; பின்
அஃதறக் கலந்து;
தொலைந்த தன்னைத் தேடித் தொலைந்து
தொலைத்த பின்னும் தேடலுள் திளைக்க
மனது முழுதும் மகிழ்ந்து நிறைய
களைத்து அணைத்து  கண்கள் மூட
சற்றே விலகி முகிலாய் நடந்தாள்
நொடிகள் கரைய, நீராடி வந்தாள்
சட்டென நெருங்கி கேசம் களைத்து
சற்றே நகைத்து இதழ்தனைப் பதித்தாள்
ஊடலின் இன்பம் கூடல்
என உரைக்கா துரைத்தாள்!  

Friday 14 October, 2011

சங்கத் தமிழ்ச் சாரல் - 1 (அகநானூறு-1)

      எனக்கும் அவளுக்குமான உரையாடல்கள் எங்கள் இருவர் தொடர்பானதாய் மட்டுமே முதலில் தொடங்கியது. இதோ, இன்று இந்த விடிகாலை வெள்ளி முளைக்கும் தருணத்தில், கண்ணாடிச் சாரளத்தின் வழி மெல்லிய பூத்தூறலாய் சிதறும் மழைச் சாரலினை ரசித்துக்கொண்டே கண்கலந்து பேசிக் கொண்டிருக்கும் அழகிய தருணத்தில் அவள் கேட்கிறாள், "என்ன பேசலாம்?" "அழகு!!"- நான். "அழகெது?" - அவள். வழக்கம்போல் என் சுட்டுவிரலால் அவள் முகம் காட்டிப் புன்னகைக்கிறேன். சற்றே வெட்கி, பின் இல்லையெனத் தலையசைத்து தொட்டில் அருகில் சென்று விழிநாட்டுகிறாள். உவப்பால் விழிகள் விரிய, குழந்தையா? எனக் கேட்கிறேன். "பெயர்?" - இது அவள். "தமிழ்" - இது நான். இதுதான் அழகு என்று கூறிவிட்டு மீண்டும் என் அருகில் வந்தமர்கிறாள். இவ்வாறு தொடங்குகிறது எங்கள் இருவருக்கும் இடையேயான உரையாடல் பனிபொழியும் அந்த அழகிய அதிகாலையில்.. இனி வழக்கம்போல, எனக்கும் அவளுக்கும் இடையேயான உரையாடல்களில், அவளுக்கான என் மனச் சிதறல்களின் தொகுப்பு...
      கண்களில் அரும்பி, இதயத்தில் மலர்ந்துப் பின் அங்கேயே வேரூன்றி ஆலமரமாய் கிளைத்து நிற்கும் காதல் வந்துவிட்டாலே, அதனுடன் இலவச இணைப்புகளாய்ப் பற்பல துன்பங்களும் காதல் கொண்ட நெஞ்சத்தூடே வந்து சேரும். அத்துன்பங்களையும் ஒருவித மயக்கம் கலந்த மகிழ்வோடு அனுபவிக்கவும் காதல் கற்றுத்தரும். எவ்விதத் துன்பத்தினையும் ஆடிக்காற்று அள்ளி வரும் தூசியைப் போல ஒரு நொடியில் ஊதித் தள்ளக் கற்றுத் தரும் காதல், தன மனம் நாடிய சகியைக் காணாது தவிக்கும் பிரிவாற்றாமை எனும் கொடிய நோய்க்கு மட்டும் எவ்வித மருந்தும் அளிப்பதில்லை.. சங்கக் கவிகளுள் ஒருவர் பாடியதைப் போல, அணிந்திருந்த இடையணி கால்கள் வழி கழன்று விழும் அளவு உடலை மெல்லியதாய்ச் செய்துவிட்ட பின்னரும், காதலனை அல்லது காதலியைக் காணாது ஒரு துளி நீரும் உள்ளிறங்கா. இவ்வாறு தலைவி, தான் காதல் கொண்ட தலைவனைக் காணாது தவிக்கும் அந்திப் பொழுதுகளிலெல்லாம், அவள் உடன் உறைந்திருக்கும் தோழியே தலைவனைக் கண்ணுறுவதற்கோ, செய்திகளைத் தூதாக எடுத்துச் செல்வதற்கோ உற்ற துணையாய் இருப்பாள். தலைவன் வாராது போன துன்பத்தினால் மூச்சுக்காற்று கூட வெளிவராத அளவிற்கு மௌனத்தின் கடலில் மூழ்கிக் கிடக்கும் தலைவியின் நிலை கண்டு மனம் வெதும்பிச்  சினந்து அத்தலைவனிடம் புலம்பவும் செய்வாள் அந்த வெள்ளை மனம் படைத்த தோழி...
      இன்புறுதலில் இருவகை உண்டு! எதிர்பார்த்து வரும் இன்பத்தினை விட, எதிர்பாராது வரும் இன்பம் அகமகிழ்வை மிக்கதாக்கி உள்ளத்தைப் பூரிப்படையச் செய்யும்... அதுவும் காதலில் வரும் எதிர்பாராத இன்பத்தினால் காதலனும் காதலியும் அடையும் உவகையின் அளவினைச் சொல்லி அறியவேண்டுவதில்லை! ஆனால், ஒரு வேளை நம் தலைவனைப் போல, எதிர்பாராது வரும் இன்பத்தினை தினம்தோறும் அனுபவித்துவரும் ஒருவனாய் இருந்தால்!?? 

இதோ!! இந்த அகநானூற்றுப் பாடலில் கபிலர் கூறும் கதையினை சற்றே செவிமடுப்போமே!! 

    வளமையான இலையினை தன்னகத்தே கொண்டு, தாமாகப் பழுத்த பெருங்குலைகளில் கிடக்கும் இனிய வாழைப்பழங்களைக் கூட சட்டை செய்ய விடாமல் தடுக்கும், மலைச் சரிவில் பருத்துக் காணப்படும் தேனினும் இனிய பலாச் சுளைதனை உண்டு, மிகப்பழமையான பாறையை ஒட்டி சலசலத்து ஓடும் நெடுஞ்சுனையில் கிடக்கும் அமுதத்தினையும் விட மயக்கம் தரக் கூடிய நறும் தேனினை அறியாது உண்ட ஆண் குரங்கு ஒன்று,  அருகில் இருந்த சந்தன மரத்தில் கூட ஏறாது, அருகில் உள்ள நறுமணம் வீசும் மலர்களினூடே மகிழ்ந்து  படுத்திருக்கும், அறியா இன்பம் நிறைந்து காணப்படும் மலை நாட்டைச் சேர்ந்த தலைவ!  எதிர்பார்த்து வரும் இன்பம் உனக்கு என்றுமே அரியதுதானோ !?  மிகுந்த அழகினையும், மூங்கிலைப் போன்ற செழித்த தோளினையும் உடைய இவள், (இத்தலைவி) நிறுத்த முடியாத நெஞ்சோடு உன்பால் காதல் கொண்டதினால், இவள் தந்தை இவளைக் காக்க காவலன் ஒருவனை நியமித்திருக்கிறார். அவன் சற்றே அசந்து கண்ணயரும் நேரமான இரவுப் பொழுதில் வந்து அவளைச் சந்திப்பதே உனக்கு உரித்தானது.. இதோ! வேளை வந்துவிட்டது. பசுமையான புதர்களும், வேங்கை மரமும், ஒளிரும் பூங்கொத்துக்களும் கூட விரிந்து விட்டன! நீண்ட நெடும் முழுநிலவின் ஒளியும் ஊரினைத் தழுவத் தொடங்கிவிட்டது!!   

 அகநானூறு 
 பாடல் : இரண்டு  ; திணை: குறிஞ்சி ; நிரை: களிற்றியாணை நிரை;  பாடியவர்: கபிலனார் ; தோழி தலைவனிடம் சொன்னது

கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை
ஊழுறு தீங்கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது,
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல்வேறு விலங்கும், எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கெவன் அரிய?
வெறுத்த ஏஎர், வேய்புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு
இவளும், இனையள் ஆயின், தந்தை
அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக்
கங்குல் வருதலும் உரியை; பைம்புதல்
வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன;
நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே! 

பின் குறிப்பு: முதல் முறை சங்க இலக்கியம் குறித்து எழுதத் துணிந்திருக்கும் எனக்கு, தமிழ்க்காதலன் என்பதைத் தவிர்த்த எந்த ஒரு தகுதியும் கிடையாது. தவறுகள் இருப்பின், தயை கூர்ந்து சுட்டிக்காட்டவும். தாழ்மையுடன் திருத்திக்கொள்வேன்.

Wednesday 31 August, 2011

களவியல்!!














முன்பனிக் காலம்... ஓர் முழுமதி நேரம்...
வீசும் வாடையின் குளிர்தனைப் போக்க
அவளின் குழலினும் கருத்த மேகங்க ளிரண்டு
வானினும் ஓடையில் சட்டென இறங்கி
கரங்களைக் கோர்த்து காதல் புரிய,
முத்தங்களிட்டு சத்தமும் செய்ய
ஆசையிற் தெறித்த எச்சிற் துளிகள்
உலகம் எங்கும் மழையாய்த் தூற,
எழுப்பிய சத்தம் இடியாய் இறங்க
வெப்பம் விழுங்கும் வேதியியல் வினையால்
நெஞ்சின் ஊடே குளிர் ஒன்றிரங்க
மூளையின் மூலை அவள் நினை வனுப்ப
கருநெடுங்காட்டில் தணல் பொறி போல
பற்றிய நெருப்பில் செவிகள் சிவக்க
மூடிய இமையின் பிதுங்கிய விழிகள்
அவள்புறம் திரும்ப - அவளின் விழியோ
இமைகளை இறக்கி பிறையென ஒளிர
கால்கள் வண்ணக் கோலங்கள் இட
என் கைகள் இரண்டும் அவள் இதழ் தேட,
கால்கள் இரண்டும் அவள் இடை நாட,
பிதுங்கிய விழிவழி அவள் இமை நோக்கி
மூச்சுக் காற்றில் முகங்கள் சிவக்க
இதழ்கள் இணைந்து தணல் வழி பேச
தணல் - தழலென மாறி கொழுந்து விட்டெரிய
நெடிதுயர் தென்னை சாமரம் வீச
முழு மதியெனும் சந்திரன்
முகமும் சிவக்க
தோட்டக் குயில்கள் தேனிசை பரப்ப
அம்பலம் ஏறிய எங்கள் கூடல்
வள்ளுவன் உரைத்த இருவரிப் பாடல்!
கூடலில் திளைத்த கூடுகள் களைக்க,
கலைந்த ஆடை அப்புறம் சரிய,
அவள்
என் மார்பில் புதைந்து
அவளின் வாசனை நுகர
நானோ... கண்கள் மூடி நினைவுகள் நுகர்ந்தேன்...
முன்னொரு மாலை அக்கினி வெயிலில்
குளிர் அறை தன்னில் கூடிய பொழுதில்
இங்ஙனம் கேட்டு காதைக் கடித்தாள் -
மழை வருவ தெங்ஙனம் ?
சற்றே என் புருவம் தேய்த்து
இதழ் மடித்துரைத்தேன்...
மேகங்கள் ரெண்டும் கூடும் நேரம் சிதறும் துளிகள்!!...
என் மார்பைக் குத்தி "பொய்"யென உரைத்தாள்...
நினை வது கலைய,
ஒருகணம் திகைத்து
சட்டென உரைத்தேன் சற்றே உரக்க
மழை! மழையென!!
திக்கென விழித்த அவளோ ஒரு கணம்
ஆடைகள் தேடிப் பின் குழம்பி விளித்தாள்;
எங்கே மழைத்துளி!??
அன்றலர் மலராய் விரிந்த இதழின் மேலே;
கேள்விக்குறியாய் நீண்ட நாசியின்
கீழ்புறம் முத்தென துளிர்த்த வியர்வைத்
துளிகள் நோக்கி என் விரல்கள் நீள,
அதோ! என்றுரைத்தேன்!
வில்லெனும் புருவம் வளைத்து என் முகத்தினைப் பார்த்தாள்;
அவள் செவிகள் மட்டும் கேட்கும் வண்ணம் ரகசியம் சொன்னேன்...
மேகங்கள் ரெண்டும் கூடும் நேரம் சிதறும் துளிகள்... மழையென..!
ஒருகணம் திகைத்து மறுகணம் நகைத்தாள்...
எங்கள் இருவருக்குமாய் சேர்த்து வெட்கத்தில்
சிவந்தது வானம்!!

Monday 15 August, 2011

நினைவு நாடாக்கள்



ஊரையே மறைக்கும் அளவுக்கான புழுதியை தெருவெங்கும் வாரித் தெளித்தவாறே உருண்டோடி வந்து நின்றது நான் வந்த அருங்காட்சியகத்தில் வைக்க சகல தகுதிகளையும் உடைய அந்தஅரசுப்பேருந்து . எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படும் இறைவனைப்போல், முகத்தின் முன்னால் படர்ந்து கிடந்த புழுதியை கைவீசி விலக்கிக்கொண்டே இறங்கினேன். அந்த பேருந்து மீண்டும் கிளம்புகையில் வாரி இறைத்த புழுதி சற்றே அடங்கும்வரை அங்கேயே மௌனமாய் நின்றிருந்தேன். பின் கலங்கலாய் காட்சிகள் தெரியத் தொடங்கின. நீண்ட நெடுங்காலத்துக்குப்பிறகு நுகர்ந்த அந்த மண்வாசனைக் காற்றை நுரையீரல் முழுவதுக்குமாய் நிரப்பிக்கொண்டே, பார்வையை அலையவிட்டேன் . ஊர் வெகுவாக மாறித்தான் விட்டிருந்தது. ஆனால், அந்த அரசமரத்தடி தேநீர்க் கடை மட்டும் அப்படியே அதே இடத்தில்…
சாலையைக் கடந்து (இப்போதிருக்கும் நகரத்தின் சாலைகளுடன் ஒப்பிட்டால், அதை ஒரு குறுக்குச்சந்து என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்) "அழகு செட்டிநாடு ஓட்டல்" என்று பெயர் மாறிவிட்டிருந்த அந்த காரைக்குடியார் டீக்கடைக்குள் நுழைய முற்பட்டேன். நான் கடைசியாக ஊரை விட்டு சென்றபோது இருந்ததற்கும் இப்போதைக்கும் அந்த பெயர்ப்பலகையைத் தவிர பெரிதாக எதுவும் மாற்றம் இருக்கவில்லை.கடையின் முன்புறத்தில் பாய்லர் அருகில் நின்றுகொண்டு டீ ஆத்திக்கொண்டிருந்த சிறுவன் சிவப்பு நிற முண்டா பனியனும், நீல நிற அரசுப்பள்ளி கால்சட்டையும் அணிந்திருந்தான். அநேகமாக “அழகு” வின் மகனாக இருக்க வேண்டும் என யூகித்தேன். அவனிடம் "ஒரு டீ போடுப்பா", என்று சொல்லியவாறே கடையின் உள்ளே நோட்டமிட்டேன்… வழக்கமாய் எல்லா கிராமங்களின் பேருந்து நிறுத்தத்தை ஒட்டிய டீ கடைகளிலும் அமர்ந்திருப்பது போலவே இங்கும் சில வெண்மை என்ற நிறமே அறியாத தேகத்தை மறைக்க மேலாடை ஏதும் அணியாத, வாழ்க்கையின் விளிம்பை அடைந்துவிட்ட நிம்மதியும், விரக்தியும் கலந்து குழம்பிக் கிடக்கும் மொத்தமான கண் கண்ணாடிகளினூடே தெரிந்த கண்களையும் கொண்ட, கிழவாடிகள் என்று செல்லமாக அழைக்கப்படும் முதியவர்களே இங்கும் வீற்றிருந்தனர். நான் கண்களால் துழவியதைக் கண்டு கொண்ட ஒருவர், “யாருப்பா??” என விளிக்கவே, “ராமசாமிப்பிள்ளை பேரன் தாத்தா” என்றேன்..

“யாரு, கங்காணி வீடு ராமசாமி பிள்ளையா?

“ஆமா தாத்தா!” “யாரு பையன்?” “கனகராசு பையன் தாத்தா”

கனகராசு அந்த நடு ஆளா?சொகமா இருக்கியாபா?, அந்த காலத்துல உங்க அப்பாரு இந்தா இந்த பையன மாதிரி இருக்கும்போது நாங்கலாம் ஒண்ணா சேர்ந்து ஆத்தங்கரையில கபடி விளையாடுவோம்… அப்பாரு எப்படி இருக்காரு??”
அப்பா நாலு வருஷத்துக்கு முன்னாடியே காலமாயிட்டாரு தாத்தா.. வீடு இன்னும் அப்படியே கெடக்கு… அதான் ஊர் பிரசிரண்ட பாத்து பேசிட்டு ஒரு முடிவு பண்ணிட்டு போலாம்னு வந்தேன்… யாரு இப்ப பிரசிரண்டு??
ஒரு வினாடி இருண்டு பளீரிட்ட அவரின் கண்கள் அநேகமாக அவரின் அந்திமக் காலத்தை நினைவு படுத்தியிருக்க வேண்டும்.."அட நம்ம பெருமா கோயில் தெரு முனியாண்டி மவன் தான்… அவன் பேரு…"என்றவாறே இரு வினாடிகள் யோசித்தவர் , "ஒயே இருளப்பா!! அவன் பேரென்னடா??" என்று அருகில் இருந்த இன்னொரு கிழவாடியைக் கேட்டார்…

"அட சரவணன் பா… என்ன நேத்துதானே வந்து உன்கூட பேசிட்டு போனான்… அதுக்குள்ள மறந்துட்டியாக்கும்??"

"அப்புடியா… மறந்து போவுதப்பா… " இதற்குள்ளாக டீ வந்து விட, எங்கள் பேச்சு சற்றே தடைப்பட்டது… குடித்து முடித்து விட்டு க்ளாசை பையனிடமே திரும்பக் கொடுத்து, காசையும் கொடுத்தேன்… சிநேகமாய் சிரித்தான் சிறுவன்…

அப்பொழுதுதான் கவனித்தேன்.. கடையில் கல்லா பெட்டி அருகிலேயே ஒரு நாற்காலியை போட்டு ஒரு 1-1/2 வயதுக் குழந்தை உருட்டிக் கொண்டிருந்தது… இடுப்பில் இருந்த அரைஞாண்கயிறு தவிர வேறு எதுவும் உடையோ, ஆபரணங்களோ கண்டிராத, பையனைப் போலவே (அநேகமாக அண்ணனாக இருக்கக் கூடும்) கருமை படிந்த தேகத்தை மட்டுமே ஆடையாய்ப் போர்த்திக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தது… பையன் மீதி சில்லறையைக் கொடுக்கும் போது நான் சற்றே தவற விடவே, இரண்டு ஒரு ரூபாய் நாணயங்கள் குழந்தை அருகில் விழுந்தன… தலை உயர்த்தி அண்ணாந்து பார்த்தது.. அந்த நாணயங்கள் உருண்ட சத்தம் அதற்கு மகிழ்ச்சியை ஊட்டியிருக்க வேண்டும்… மூக்கில் வழிந்த சளியுடனே ஆனந்தமாக கைகொட்டி சிரித்தது… ஏனோ, எடுத்துக் கொஞ்ச வேண்டும் என்று தோன்றவில்லை… மெலிதாய் புன்னைகைத்து விட்டு, அந்த கிழவாடியிடம் "போயிட்டு வரேன் தாத்தா…" என்றவாறே கடையை விட்டு வெளியேறி வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன்…
எங்கோ எப்பொழுதோ ஒரு புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது…“ இந்த லோகத்துல எல்லாருக்கும், வெள்ளைநிறத் தோலுடன், பெடல்புஷ் பாண்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்துகொண்டு, தெருவில் போவோரை எல்லாம் பொம்மை துப்பாக்கியில் சுட்டுவிடுவேன் என்று திமிர் காட்டுகிற குழந்தை அழகு… மயிலாப்பூர் தெப்பத் திருவிழாவில் இரவு ஏறும் நேரத்தில் உடம்பெல்லாம் சேறுபடிந்து, மன வளர்ச்சி குன்றியவனாய், இயற்கை தலையில் அடித்து தரைக்கு எத்தின பிராணியாய் கயிற்றில் கட்டப்பட்டு பிச்சை எடுத்துத் திரியும் சிறுவன் அருவெறுப்பு!!”
மனத்தைக் குழப்பிய நினைவுகளை தலையசைத்துக் கலைத்துவிட்டு வீடு நோக்கி நடைபோட்டேன்.. கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்டன…நான் ஊருக்கு வந்து…கடைசியாக ஊரில் இருந்த அரசுப் பள்ளிக்கூடத்தில் பன்னிரெண்டாவது முடித்த பிறகு எனது கல்லூரிப் படிப்புக்காக அப்பா தனது வேலையை சென்னைக்கு மாற்றிக்கொண்டு வந்த பிறகு, வேலை, தங்கை திருமணம், பிறகு என் திருமணம், குடும்பம், கடமைகள் என்றான பிறகு ஊர்ப்பக்கம் வரவே இல்லை… சென்ற நான்கு வருடங்களுக்கு முன்பு அப்பா மறைந்த பொழுது கூட சொந்த பந்தங்களெல்லாம் பெரும்பாலும் சென்னையிலேயே இருந்ததனால் ஊரில் இருந்த சிலரை மட்டும் அங்கே வரவழைத்து காரியங்களை முடித்தாகிவிட்டது…
இத்தனை வருடங்களுக்குப் பின்னர் நான் பிறந்த வீட்டையும், தவழ்ந்த நிலா முற்றத்தையும், ஓடி விளையாடிக் கீழே விழுந்து சிராய்த்துக்கொண்ட நெல் காய வைக்கும் முன்வாசலையும் பார்க்கப் போவதை நினைத்தவுடன் ஏதோ ஒன்று என் தொண்டைக்குழியை அடைத்துக்கொண்டது.. இதற்குள்ளாகவே வீட்டின் அருகாமையில் வந்து விட, பக்கத்து வீட்டில் இருந்த சரசு அக்காவின் வீட்டிற்குள் நுழைந்தேன்… அப்போதுதான் உலை கொதித்துக் கொண்டிருந்தது போல… அக்கா வியர்க்க விறுவிறுக்க சமயலறையில் இருந்து வெளியே வந்து பார்த்தது… “வாய்யா…இந்தா வீட்டு சாவி ஜன்னல்ல மாட்டி இருக்கு பாரு” என்று கூறியவாறே முகத்து வியர்வையை சீலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டது… “மாமா எங்கே.. காட்டுக்கா?” “இல்லைய்யா சொசைட்டிக்கு பால் ஊத்த போயிருக்காங்க..நீ வீட்ட தொறந்து உள்ள போ.. நான் பின்னாடியே வாரேன்”
போய் வீட்டை திறந்து பார்த்தவுடன் மனசு முழுவதும் வீட்டை நிரப்பியிருந்த வெறுமை வந்து சூழ்ந்து கொண்டது… என் சிறுவயதில் இவ்வளவு பெரிய வீடு முழுவதும் சொந்தங்களால் நிரம்பிக் கிடக்கும்…. அந்த வெறுமை தந்த சோர்வுடனே சென்று குளித்து விட்டு பூஜை அறையில் வந்து நின்றேன். அதற்குள்ளாக அக்கா காலை உணவை இங்கேயே எடுத்துக்கொண்டு வந்துவிட்டது… சாப்பிட்டுவிட்டு பிரசிரண்டு வீட்டை தேடிக் கிளம்பினேன். வழிகாட்ட அக்கா அதன் ஆறு வயது பையனையும் கூடவே அனுப்பி வைத்தது… எங்கள் ஊரில் ஒரு வழக்கம்.. புதிதாக வீடு கட்டுவதாக இருந்தாலோ, அல்லது வீடு சரி பார்பதாக இருந்தாலோ ஊர் தலைவரிடம் தான் முதலில் சொல்லப்படும்.. அவர் பிறகு அதனை ஊரில் இருந்த 5-6 கொத்தனார்களில் யாராவது ஒருவருக்கு சுழற்சி முறையில் திருப்பி விடுவார்.. அனைவருக்கும் சமமாக வேலைகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஏற்பட்ட பழக்கம் அது… இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது…
அவர் வீட்டை அடைந்த உடன் பையனை வீட்டுக்கு செல்லும்படி கூறிவிட்டு, அவரிடம் பேச வேண்டிய விஷயங்களையும் பேசிய பின்னர் வீடு திரும்பத்தொடங்கினேன்.. அதற்குமுன் ஊரில் நான் பார்க்க ஆசைப்பட்ட ஒரு இடம் இருந்தது… அதை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.. அரசு மேல்நிலைப்பள்ளியைத் தாண்டி நடக்கும்போதே நெஞ்சுக்குள் ஒரு சின்ன குறுகுறுப்பு ஒட்டிக் கொண்டது… இதோ, இந்த பக்கம் தான்… செட்டியார் கடை தாண்டி அந்த இரண்டாவது….. இப்போது அந்த இடம் இருந்த நிலை என்னை சற்றே வேதனைக்குள்ளாக்கியது... அங்குதான் "மூக்கையன் சலூன் கடை" இருக்கும்.. இப்போது அது இருந்ததன் அடையாளமாக வெறும் மண் குவியலும், துரு ஏறிய செல்லரித்த பழைய பெயர்ப் பலகையும் மட்டுமே கிடந்தன….வீடு வீடாக சென்று முடி திருத்தும் பணியை விடுத்து, முதன் முதலில் எங்கள் ஊரில் கடைபோட்டு, சுத்துகிற நாற்காலி வைத்து, முன்னும் பின்னும் பெரிய பெரிய கண்ணாடிகள் வைத்து, பெரிய சைஸ் ரேடியோ வைத்துக் கட்டப்பட்ட "மூக்கையன் ஆண்கள் அழகு நிலையம்…"
முதன் முதலில் இங்கு வந்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது… 6 வயது இருக்கலாம்.. அதிலிருந்து... முதற்முதலில் மீசை அரும்பிய போது இந்த கடை கண்ணாடியில் நின்று பார்த்து ரசித்துக்கொண்டிருந்த வரை… கையில் ஒரு விதமான வித்தியாசமான கத்திரியையும், சீப்பையும் வைத்துக் கொண்டு, பளீரென்ற வெள்ளை நிற வேட்டி சட்டையுடன் மூக்கையன் முடி திருத்துவதில் ஒரு அலாதியான நேர்த்தி தெரியும்.. சிறுவர்களுக்கு முடி வெட்டியபின் வெட்டுப்பட்ட துகள்கள் ஒட்டியிருந்தால் குத்துமே என்பதற்காக முகத்தையும், கழுத்துப்புறத்தையும் நன்றாக ஒரு துணி வைத்து துடைத்து, கழுத்தில் பாண்ட்ஸ் பவுடர் தூவி விட்டு, எட்ட நின்று ஒரு கணம் அழகு பார்த்துவிட்டு, பின்னர்தான் இருக்கையிலிருந்து இறங்க விடுவார்… சிறு வயதில் யாரோ வீட்டுக்கு வந்த உறவினர் ஒரு முறை என்னிடம் என்ன ஆக போறீங்க தம்பி பெரிய ஆள் ஆகி? என்று கேட்க, மூக்கையன் மாதிரி ஆகப்போறேன் என்று சொல்லி அப்பாவிடம் அடிவாங்கிய நினைவு கூட இருக்கிறது.. நாங்கள் பதினொன்றாவது படித்துகொண்டிருந்த சமயத்தில் தான் ரஜினிகாந்தின், முரட்டுக் காளை என்று நினைக்கிறேன்… வெளியாகி இருந்தது… அந்த படத்தில் வரும் ரஜினி போஸ்டர்கள் எல்லாம் கலர் கலராய் கடையின் சுவர் எங்கும் ஆக்கிரமித்திருக்கும்… மூக்கையன் தீவிர ரஜினி ரசிகர்.. ரஜினியின் முதல் படத்திலிருந்து அவர் இருக்கும் எல்லா புகைப்படங்களையும் எப்படியோ தேடி கண்டுபிடித்து கொண்டு வந்து விடுவார்.. அதைப்பார்ப்பதற்காகவே பள்ளி முடிந்ததும் எங்கள் வயது பையன்கள் அங்கு வருவதுண்டு… இதையெல்லாம் தாண்டி அவர் ஒரு சிறந்த மனிதர்… நான் எங்கள் ஊரில் பார்த்த, பெரிய மனிதர்கள் என்று ஊர்க்காரர்கள் சொன்ன எல்லாரையும் விட, அவர் நல்லவர்.. யாரிடமும் அவர் அதிர்ந்து ஒரு வார்த்தை பேசி நான் பார்த்ததில்லை.. வெட்டியாக அமர்ந்து கொண்டு போவோர் வருவோரை வம்பு செய்யும் கூட்டத்தையும் அவர் கடை அருகில் நெருங்க விட்டதில்லை.. அந்த நேர்மை மற்றும் ஒழுக்கத்தினாலோ என்னவோ, எப்பொழுதுமே நெஞ்சு நிமிர்த்தி தான் நடை போட்டு வருவார்.. கடைசியாக நாங்கள் ஊரை விட்டுக்கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்பு நான் முடி திருத்துவதற்காக சென்றிருந்தேன்… வழக்கம் போல என்னுடன் உரையாடிக்கொண்டே தன் பணியை செய்து முடித்தவர்.. திடீரென கடைக்குள் வெளிச்சம் குறையவே, திரும்பி வாசல் பக்கம் பார்த்தார்.. அங்கே மேல தெரு சின்னையனும் , இன்னும் சிலரும் கோபத்துடன் நின்றுகொண்டிருந்தனர்..
முதலில் சின்னையன் தான் “டே ********** (அச்சில் ஏற்ற முடியாத வார்த்தையில் அர்ச்சனை) வெளிய வாடா” என்றான்… முதன் முதலில் மூக்கையன் கோபப்பட்டு அன்றுதான் பார்த்தேன்… அதுவும் ஒரு கணம்தான், கண்களில்… பின்பு அமைதியாக “என்னடா வேணும் உனக்கு” என்றார்.. “வாடா வெளிய… பிள்ளையாடா பெத்து வச்சுருக்க? என்ன, பெரிய எடத்து பொண்ணா பாத்து வளைச்சு போட சொல்லி நீதான் சொல்லி குடுத்தியா?” மூக்கையன் பதில் பேசும் முன்பாக சரமாரியாக செருப்புகள் பறந்து வந்து கடைக்குள் விழுந்தன… கொஞ்சநாளாகவே ஊருக்குள் அரசல் புரசலாக ஒரு பேச்சு அடிபட்டு வந்தது…மூக்கையன் பையனுக்கும், முதலாளி பிள்ளையின் மகளுக்கும் ஒரு விஷயம் ஓடுவதாக… இன்று விடியற்காலை மூன்று மணிக்கு அவளை கூட்டிக் கொண்டு ஊரை விட்டு சென்றும் விட்டான்..
ஊர் பஞ்சாயத்தில் நிறுத்தி அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்த போதெல்லாம் ஒரு வார்த்தை கூடப்பேசாமல் தலைகுனிந்து நின்றிருந்தார்… முதல் முறையாக… அதுவும் அவர் செய்யாத, தவறும் இல்லாத ஒரு காரியத்துக்காக… கூட்டத்தில் ஓரிருவர், "டேய் மூக்கா… எப்பவும் நெஞ்ச நிமித்திக்கிட்டு நடப்பியே.. எங்க இப்ப மூஞ்சியக்காட்டி பதில் சொல்லுடா" என்று குரல் கொடுத்தனர்… மனிதர்கள் சக மனிதன் மேல், அவன் குணங்களின் மேல் கொண்டுள்ள ஆற்றாமை எனும் தீ வளர்ந்து அங்கே பண்பாட்டை அழித்துக்கொண்டிருந்தது… அதன்பிறகு அவர் தலை நிமிர்ந்து பார்க்கவே இல்லை… இரண்டு நாட்களுக்குப் பின்னர் நாங்கள் ஊரை விட்டுக் கிளம்பிய அன்று அவரிடம் விடைபெற்றுக்கொண்டு பேருந்தில் ஏறினேன்… அடுத்த நாள் காலை நங்கள் சென்னை அடைந்தபிறகு அவர் முதல்நாள் இரவே மாரியம்மன் கோவிலில் தூக்கிட்டுக் கொண்டதாக செய்தி வந்தது…மனம் நொந்து போனது! அதன் பின்னர் இப்போதுதான் கடையைப் பார்க்கிறேன்… ஏனோ கடை இருந்த இடத்துக்குள் நுழைந்து பார்க்க வேண்டும் எனத் தோன்றியது … குவிந்து கிடந்த கற்களை விலக்கியவாறே நுழைந்தேன்.. உடைந்த கண்ணாடிச் சில்லுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடந்தன.. திடீரென அடித்த காற்றில் புழுதி பறக்கவே, சற்றே கண் மூடினேன்.. கால் அருகிலிருந்த ஒரு கல்லில் இடறியது.. புழுதி அடங்கியதும் கல்லை நகர்த்திக் கொண்டே குனிந்து பார்த்தேன்.. கல்லின் அடியில் இருந்து ஏதோ பறந்தது … அது ரஜினியின் ஒரு பழைய புகைப்படம்.. ஏனோ அதை எடுத்துக்கொள்ள வேண்டும் போல் தோன்றியது.. எடுத்து சட்டைப்பையில் பத்திரப்படுத்தியவாறே நினைவுகள் சூழ அந்த இடம் விட்டகன்றேன்…

வீட்டுக்கு சென்று, சரசு அக்கா வீட்டில் மதிய உணவை முடித்து விட்டு, மாமனுடன் கொஞ்ச நேரம் மாமரத்தடியில் கட்டில் போட்டு பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை… மணி ஐந்தாகி விட்டிருந்தது.. சட்டென முகம் கழுவி, திருச்சிக்கு செல்லும் கடைசிப் பேருந்தை பிடிக்க ஆயத்தமானேன்.. “ஜெயஸ்ரீயையும் புள்ளைங்களையும் கேட்டதா சொல்லுய்யா…” என்றவாறே விடைகொடுத்தது அக்கா..

அடுத்த நாள் சென்னை வந்த பிறகு வழக்கமான வேலை, குடும்பம் என்று மூழ்கி விட்டதில் ஊர் மறந்துபோனது.. ஒரு ஒரு மாதம் கழித்து முடி திருத்த ஒரு கடைக்கு சென்றேன்… பையனின் வற்புறுத்தலின் பேரில் அந்த குளிரூட்டப்பட்ட “Romeo Hair stylists ” க்குள் நுழைந்தேன்… வண்ண வண்ணமாய் சுவரெங்கும் திறந்த மார்புடன் “மாடல்” கள் சிரித்துக்கொண்டிருந்தனர்… முடிதிருத்தி முடித்த பின்னர், வீட்டுக்கு வந்து சவரம் செய்யும் கண்ணாடி முன் நின்ற பொழுது கழுத்தில் உறுத்தின வெட்டப்பட்ட மயிர்த்துகள்கள் ஒரு கணம் என்னை மூக்கையன் கடை சுழற்நாற்காலிக்கு இழுத்துச் சென்றன … அனிச்சையாய் கண்ணாடியின் பின்புறம் செருகி வைக்கப்பட்டிருந்த அந்த பழைய ரஜினி படம் கீழே வந்து விழுந்தது.. ஏனோ என் கண்கள் கலங்கி சட்டென இரு துளி கண்ணீரை உதிர்த்தன….

Friday 1 July, 2011

கிராமியக் காதல்!!

ஊரடங்கும் சாயுங்காலம்

உன்ன நானும் பார்க்க வேணும்

பாயும் அந்த ஓடை போல

மனசு கெடந்து குதிக்கும்

நீ பூவை கிள்ளி போடும் போது

அதுக்கும் சாகப் பிடிக்கும் ...

நீ பூவை கிள்ளி போடும் போது

அதுக்கும் மோட்சம் கெடைக்கும்...

அய்யனாரு கோயிலோரம்

நீயும் நானும் அந்தி நேரம்

கைப்பிடிச்சு கொஞ்ச நேரம்

கொஞ்சி பேசும் அந்த நேரம்

ஏழு மலை மாமன் தாண்டுவேன்

மாமன் பொண்ணே உன்ன கைப்பிடிச்சா

ஏழு ஊரு நானும் வெல்லுவேன்....


ஊரடங்கும் சாயுங்காலம்

உன்ன நானும் பார்க்க வேணும்

பாயும் அந்த ஓடை போல

மனசு கெடந்து குதிக்கும்

நீ பூவை கிள்ளி போடும் போது

அதுக்கும் மோட்சம் கெடைக்கும்...

நீ பூவை கிள்ளி போடும் போது

அதுக்கும் சாகப் பிடிக்கும் ...


Sunday 8 May, 2011

முதற்காதல்

தரையில் நடந்த கால்களில்
புதியதாய் ரெண்டு இறக்கைகள்

கோபுர விளக்காய் பளீரிடும்
கண்கள்

காரணமின்றி சிரித்திருக்கும்
கிறக்கம்

அவள் மட்டுமல்ல;
அவளின் வகுப்பறையைக்
கடக்கும்போதும்
துடிப்பெகிறும் இதயம்

அவளின் நிழல்மட்டும் கண்டால்கூட
கூத்தாடும் நெஞ்சம்

வருடங்கள் பல ஓடியும்
அவளின் பெயர் நினைத்த ஓர் கணத்தில்
கட்டி இழுத்து
புதைக்கப்பட்டுவிட்ட நினைவுகளின்
துவாரத்தினூடே இழுத்துச் சென்று
நிதம் கொல்லும்

ஒத்துக் கொள்கிறேன்
இதயம் கலந்து
உயிரோடு உறைந்து விடும்
முதற்காதல்

மரணபரியந்தமும்!~!
மனம் நிறைக்கும் புன்னகையில் பொய்யிருக்கலாம்
கடைவிழியின் வழி தெறிக்கும் கண்ணீரில் இருப்பதில்லை
விரல்கள் உரச பயிலும் நடையிலில்லாதிருக்கலாம்
நெஞ்சத்தின் ஆழத்தில் புதைத்துவிட்ட பின்னரும்
முளைத்தெழுந்து உறக்கம் பறிக்கும்
நினைவுகளில் என்றும்
உயிர்த்திருக்கும் அவளுக்கான என் காதல்

Saturday 7 May, 2011

புணர்தலும் புரிதலும்!~!

குளிரூட்டப்பட்ட பேரங்காடியின்
ஜனத் திரள்களுக்கு நடுவே
இரு விழியெனும் வாள் கொண்டு
கண்கள் விரியச் சிரித்துத் திரிந்திருந்த
குமரிகளின் சதை ரசித்துத் திரும்பிய
ஓர்நாள் மாலை நேரம்
மனதின் உள்ளே இருந்த ஏதோ ஒன்றை
வெகு இயல்பாக அறுத்துப்போட்டது
நடுத்தெருவில் புணர்தல் நிமித்தம்
பின்தொடர்ந்த ஆண் நாயின்
புறம் நோக்கி வள்ளென மெலிதாய் ஒரு முறைப்பு தந்த
பெட்டை நாயும், அது கண்ட உடன்
தலைகுனிந்து பின்வாங்கி அதன் வழி விலகிய அந்த ஆண் நாயும்...

Tuesday 15 February, 2011

காதல்...

விழிஎன்னும் ஈரெழுத்துச் சொல்லில் தொடங்கி
இதயமெனும் நான்கெழுத்தில் முடியும் அழகிய கவிதை... காதல்...

நெடுங்காலம் விழி சுவைத்து
ஊர்பார்க்க விரல் கோர்த்து
ரகசியமாய் தோள் உரசி
செவிநிறைய உன், என், நம் கதை பொழிந்து
தெரு நனைத்த மழைநாளில்
நின் இன் முத்தச் சாரலில் என் உயிர் நனைத்து
உயிர் பூத்திட்ட ரோஜாப்பூ தருணங்களில் இல்லை
மனம் அறுத்துப் பிரிந்த பின்னால்
உன், என் பெயர் பார்த்த ஒரு கணத்தில்
நம் விழி உதிர்க்கும் இருதுளிக் கண்ணீரில்
உயிர்த்திருக்கும் உன், என், நம் காதல்....