Monday 1 February, 2010

மணிமேகலை....4

மணிமேகலையின் கொடுங்கனவு

சிவபக்தியில் சிறந்த மதுரந்தகனா

அல்லால், எதிரிகளை வதம் செய்த ஆதித்தனா!?

சொல்லடி கண்ணே உன் மனம் நாடும் காளையை!?

அவர்க்கே உன்னை மனம் முடிப்பேன்..

வலைவிரித்தது நந்தினி எனும் நாகம்,

கள்ளமில்லா மேகலைக்கும்

நாணத்துடன் மனம் திறந்தாள் மணிமேகலை

தேவதை என்றெண்ணி நாகத்திடம்..

நாடாளும் வேந்தன் வேண்டேன்!

சிவனை நாடும் பதியும் வேண்டேன்!

மனம் பறித்திட்ட காதலன் உள்ளான்!

என் உள்ளத்தின் உள்ளே சயனம் கொண்டான்..

என் கனவெல்லாம் அவனே! நேற்று முதல் நினைவிலும் அவனே!

உயர்ந்தன நந்தினியின் விற்புருவங்கள் ஓர்கணம்

மனதிற் தேக்கிய வன்மத்துடன் பூத்தாள் ஓர் புன்னகை

கண்ணே நீ கூறும் காதலன், உன் மனம் திருடிய நற் திருடன்

மூவேந்தரும் போற்றும் வாணன், அவன் வந்திய தேவன் அல்லவோ!??

தன் அம்பொன்று திசைமாறிய அர்ச்சுனனைப் போல் வியந்தாள் மேகலை!

நம்பித் தொலைத்தாள் நந்தினியை..

கனவில் வந்த கணம் முதல் முத்தமிட வந்த நொடி வரை

அனைத்தும் சொல்லி முடித்தாள் விக்ரமாதித்தன் கட்டிற் பதுமையென

அகன்றாள் அவ்விடம் விட்டு.. நிம்மதியாய்..

அறைக்குள் ஓர் முழுமதியாய் உறங்கி இருந்தாள் சம்புவரையர் குலமகள்

தேவதை இடம் நாடி வந்தான் அவள் காதலன்..

என்றும் போல் நிலவில் நடைபழகிட யத்தனித்தாள் மேகலை

சட்டென வந்தான் ஓர் கொடுங்காளை..

காதலியைக் காண கத்தியின்றி வந்திட்ட வந்தியத்தேவனைக் கொல்ல

ஓர் கொலை வாளுடன்.. அய்யகோ! மணாளா!! அவனை யானே கொல்வேன்..

வீரிட்டோடினாள் புலியை புறம் காணச் செய்த மறத்தமிழச்சி

அவன் முகம் கண்டாள்! உறைந்தாள்!

உயிரிலும் மேலான தமையன்! மாபெரும் வீரன், அவன் கந்த மாறன்..

சட்டெனக் கலைந்தது கனவு.. !!


ராஜ சிம்மம்


மாகடலும் மடுவாய்த் தோன்றும்

அந்த ஜனத்திரளின் முன்னால்..

அவ்வளவும் சம்புவரையர் இல்லம் முன்னால்...

பார்போற்றும் வேந்தர், சுந்தர சோழர்

ஈன்றெடுத்த கருஞ்சிறுத்தை

வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி..

ஐம்பூதங்களும் ஒருங்கே உருவெடுத்து வந்த தேவன் போல்

வந்தான் கரிகாலன்..

நுழைந்தான் நாகப் புற்றினுள்..


ஆட்டி வைத்த சூத்திரியும்

ஆடிக்கிடந்த பொம்மைகளும்

அதிர்ச்சியில் உறைந்தன ஆங்கே!

கருஞ்சிறுத்தையொன்று கக்கிக் கொண்டிருந்தது கொடும் விடம்

நந்தினியி னுடன் இருந்த சிறு தொடர்பின் விளைவோ!

விதியென்னும் எவர்க்கும் புரியா இறையோ!

யாமறியோம்...


சோழனவன் குலம் அறுக்க ஓர் நாகம்

கயல் விழியாள் துணை நாடும் கஜேந்திரன்

மகளை ராணியாக்கி அரசாளத் துடிக்கும் குள்ள நரி

இவை யாவும் நாட்டில் இருக்க, காடு சென்றான் ஆதித்தன்

வேட்டைக்கு உடன் சென்றான் உயிர் நண்பன்..


பாம்பின் கால் பாம்பறியும்..

இங்கோ நந்தினியின் காலை இவ்வேங்கையும் அறிந்தது..

உளம் பதைத்தது.. தம் தோழனிடம் மனம் திறந்தது..

உயிர் காப்பான் தோழன்! என் உயிர் ஈந்தேனும் காப்பேன் உம்மை..

உறுதியுரைத்தான் வாணன், வந்திய தேவன்

No comments:

Post a Comment